‘யா’ என்னும் வேருக்குத் தமிழில் ‘கட்டுதல்’ என்பது பொருள். ‘யாக்கை’, எலும்பு, கொழுப்பு, குருதி முதலான ஏழுவகைக் கூறுகளால் கட்டப்பட்ட காரணம் பற்றித் தமிழில் உடலைக் குறிக்கும் சொல்லாகியது. எழுத்து, அசை, சீர், தளை போன்ற உறுப்புகளால் கட்டப்பட்டதன் காரணமாகச் செய்யுள் ‘யாப்பு’ எனப்பட்டது. ‘யா’ என்னும் இவ் வேர், யார்-ஆர் எனக் கட்டுதல் பொருள் தரும் பிறிதொரு சொல்லையும் அளித்தது.
‘ஆர்’ என்னும் இவ் வேர், மணிகளால் கட்டப்பட்ட மாலையைக் குறித்த ‘ஆரம்’ என்னும் சொல்லை அளித்ததைத் தமிழ்வரலாற்றில் காணலாம். ‘ஆர்’ என்னும் இவ் வேர், armus (shoulder) எனக் கை எலும்புகள் பொருந்தும் தோள்பட்டைப் பகுதியை இலத்தீனில் குறித்தது. இச் சொல், ஆங்கிலத்தில் ‘arm’(*ar – to fit together, Watkins Dict., Online Etymology Dict.) என்றானது. தோள் பகுதியைக் குறித்த ‘arm’ சொல், பிறகு தோளோடு சேர்த்து வைத்துப் பயன்படுத்திய கருவி குறிக்கவும் உரியதாக மாறியது. இக் கருவிகளை உடைய படைப்பிரிவு பின்னர், ‘army’ எனவும் ஆனது.
கீழை இந்தோ-ஐரோப்பியச் சமற்கிருதத்தில் ‘ஆர்’ ஆகிய தமிழ், ‘irmah’ என்னும் தோள் பட்டையைக் குறிக்கும் சொல் பிறக்கக் காரணமாகியது. ‘irmah’ என்னும் இச் சமற்கிருதச் சொல் ‘rtih’ எனத் திரிந்து பொருத்தமானது என்னும் பொருள் தரும் பிறிதொரு சொல்லாகவும் ஆனது. மாலையைக் குறித்த ‘ஆரம்’ என்னும் தமிழ், சமற்கிருதத்தில் hāra என அதே பொருளில் திரிந்தது.
வேர்ச்சொல்: இல் (பொருள்: கூட்டம்)
இல் – இய் – இயை – இயைதல் = பொருந்துதல்; இல் – இள் – இண் – இணை – இணைதல் = சேர்தல்; இல் – இய் – இயை – இயா – யா – யாத்தல் = கட்டுதல்.
யா - யார் – ஆர் (யா-ஆ மாற்றம்)
யா – யார் – ஆர் – ஆர்த்தல் = கட்டுதல், பிணித்தல் (யாகார – ஆகார மாற்றம்; இயை - இயா – யா – யாசு – ஆசு; யானை – ஆனை; யாமை – ஆமை; யார் – ஆர்) (யா, ப.அருளி, ப.217). (‘மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்’, அகம்.4:12); யா – யார் – ஆர் – ஆர்த்தல் = ஒலித்தல் (‘நாடு ஆர்த்தன்றே’, மதுரைக்.428; ‘நரம்பு ஆர்த்து அன்ன இன்குரல்’, முருகு.212); யா – யார் – ஆர் – ஆர்வு – ஆர்வு+அம் - ஆர்வம் = ஒருவர் மேல்/ஒரு பொருளின் மேல் பொருந்திய விருப்பம் (‘அன்பு ஈனும் ஆர்வம் உடைமை’, குறள்.74; ‘ஆர்வம் உடையவர் காண்பார் அரன் தன்னை’, திருமந்.273:1).
யா – யார் – ஆர் – ஆர்தல் = மிகுதல்(கூட்டக்கருத்தில் மிகுதிக் கருத்து; ‘ஆர்த்த சுற்றம்’, பதி.12:24; ‘போது ஆர் அமளி’, திருவெம்.1:6); யா – யார் – ஆர் = பூவிதழ்களை இணைத்திருக்கும் காம்புப் பகுதி (‘புதுமலர் ஆர்கழல்பு உகுவ’, குறுந்.282:7).
குறிப்பு:
பூவின் இதழ்களை இணைத்துக்கொள்ளும் காம்புப்பகுதி, தமிழில் ‘ஆர்’ எனப்படும். கட்டுதல் பொருளில் இச் சொல் தமிழில் உருவானது. ஆங்கிலத்தில் இக் காம்புப் பகுதியினை ‘receptacle’ என்று உரைக்கின்றனர். இச் சொல்லின் பொருளாக, ‘place for receiving or containing something’, ‘to hold, contain’ என்பனவற்றை இணையவழி வேர்ச்சொல் அகராதி உரைத்துள்ளது. பூவின் பகுதியாகிய காம்பினைக் குறிக்கும் சொல், தமிழில் உருவான அதே ஒழுங்கில் கட்டுதல்/இணைத்தல் பொருளில் ஆங்கிலத்திலும் உருவாகியுள்ளது வியப்பிற்குரியது. மேலும், ‘receptacle’ என்னும் சொல்லின் முன்னொட்டு நீங்கிய ‘ceptacle’ சொல், பற்றுதல் பொருளில் தமிழில் உருவான ‘கவ்வு-கவ்வுதல்’ என்னும் சொல்லிலிருந்து உருவானது என்பது மேலும் வியப்பிற்குரியது. ‘ceptacle’ சொல்லின் முழுவரலாற்றினைக் ‘கவ்வு-கவ்வுதல்’ சொல்வரலாற்றில் காண்க.
யா – யார் – ஆர் – ஆரம் = மலர்களாலும் மணிகளாலும் கட்டப்படும் மாலை (‘ஆரம் தாங்கிய அலர்முலை’, நெடுநல்.136; ‘விறலியர்க்கு ஆரம் பூட்டி’, பதிற்.48:2; ‘நெடுவேள் மார்பின் ஆரம்’, அகம்.120:1) – கு. அரசேந்திரன், தமிழும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளும் மொழி உறவு ஆய்வு, ப.5-6.