முன்மைச்சுட்டாகிய உகரம் வழிப் பிறந்த சொல், ‘உப்பு’ என்பது. ‘உப்புதல்’ என்னும் வினை, வீங்குதல், பருத்தல், மிகுதல், உயர்தல் என்னும் பொருள்களில் சொற்கள் பலவற்றைத் தோற்றுவிக்கும். கடல்நீர், கதிரவனால் காய்ந்ததன் காரணமாக மேலெழுந்ததே உப்புமண். ‘உப்பு’ ஆகிய இத் தமிழ், மேலை இந்தோ-ஐரோப்பியத்தில் உயர்தலைக் குறிக்கும் ‘up(உப்)’ என்னும் சொல்லாக ஆனது. இந்த ‘up’ சொல், உகர-அகர ஒலித்திரிபில் ‘up(அப்)’ என ஒலிக்கப்படுகிறது. ‘up’ ஆகிய இச்சொல்லுடன் ‘s’ என்னும் ஒலி, முன்மிகுந்து(Prothesis), ‘super’ என்ற சொல்லும் தோன்றியது. ‘super’ என்னும் சொல், ‘region’ என்னும் சொல்லுடன் சேர்ந்து super+region-sovereign எனத் திரிந்ததாகச் சேம்பர்சு அகராதி கூறுகிறது. அவ் வகையில், ‘sover’ என்னும் சொல், ‘super’ சொல்வழி வந்ததாகும். ‘super’ சொல், கிரேக்க மொழியில் ‘hyper’ எனத் திரிந்துள்ளது. hyperbole, hyperglycemia போன்ற சொற்களின் முன்பகுதியில் உள்ளது இச் சொல்லேயாகும்.
‘உப்பு’ சொல்லுடன் ‘s’ சேர்ந்து, ‘super’ சொல் தோன்றியது போல், அதே ‘உப்பு’ சொல்லுடன் ‘s’ சேர்ந்து, ‘sub’ என்றதொரு வடிவும் மேலை இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் தோன்றியது. ‘sub division’, ‘sub inspector’, ‘sub title’ என்றெல்லாம் வழங்கும் ஆட்சிகளில் உள்ள ‘sub’ சொல்லிற்குத் ‘துணை’ என்ற பொருளை இப்போது நாம் கையாள்கிறோம். உண்மையில், இந்த ‘sub’ சொல், உயர்வுப்பொருள் என்னும் அடிப்படையில் பிறந்தே அங்கு ஆளப்பட்டுள்ளது. இச் சொல்லின் பொருளை, Late Latin subdividere from sub in the sense of "resulting from further division" என்று இணையவழி வேர்ச்சொல் அகராதி அளித்துள்ள விளக்கத்தில் ‘sub’ சொல்லிற்கு ‘மேலும் ஓர் பிரிவு’ என்பதே வேர்ப்பொருளாக அமைந்துள்ளது. (‘பர’ என்ற உயர்வுப்பொருள் தமிழ், ‘further’ என்ற சொல்லாகத் திரிந்தது. அவ்வாறே, ‘உப்பு’ என்னும் உயர்வுப்பொருள் தரும் தமிழ்ச்சொல், உப்பு – ub – sub எனத் திரிந்தது பொருத்தம்).
உகரச் சுட்டு அடியாக ‘உப்பு’ என்னும் சொல் பிறந்தது போலவே, உ-உவர் என்னும் சொல்லும் தோன்றியது. ‘உப்புமண்’, ‘உவர்மண்’ ஆகிய இரண்டும் ஒருபொருள் குறிப்பன. உப்பு விளைந்த நிலம் ‘உப்பு விளை கழனி’ (குறுந்.269:6), உவர்நிலம்’ (புறம்.142:2) எனவும் ஆன வழக்குகளில் இதனைக் காணலாம். உவர் ஆகிய உப்பு இருத்தல் காரணமாகவே கடலினை வள்ளுவர் ‘உவரி’ என அழைத்தார். மேலெழுந்து உயர்ந்த மண், ‘உவர்’ எனத் தமிழில் ஆனது. இவ் ‘உவர்’ சொல், மேலை இந்தோ-ஐரோப்பியத்தில் ofer "over," (Old English), ufaro "over, across;" (Gothic) ver- (Gaulish), for (Old Irish) எனப் பல மொழிகளில் சிறுசிறு ஒலித்திரிபுகளில் வழங்கி வருகிறது. உவர்-over சொல், காலிஷ் மொழியில் ‘ver’ எனவும் பழைய ஐரீசு மொழியில் ‘for’ எனவும் வழங்குவதனைத் தமிழில் தாமரை மலர், மரைமலர் எனத் திரியும் முதற்குறை இலக்கணத்துடன் ஒப்பிடலாம். தமிழின் ‘அருவி’ சொல், இலத்தீனில் ‘riv’ எனத் திரிந்ததும் ‘அரத்தம்’ சொல், சமற்கிருதத்தில் ‘rakta’ எனத் திரிந்ததும் இம் முதற்குறைத் திரிபிற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
உவர்-over சொல், வ-ப மாற்றத்தில் upari (Sanskrit), über (German), upairi "over, above, beyond;" (Avestan), எனக் கீழை, மேலை இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் வழங்கக் காண்கிறோம். வ-ப மாற்றத்தினை உவமை – உவமா – உபமா; கவடு – கவடம் – கபடம்; கவடு – கவடம் – கவாடம் – கபாடம்; அருவி – riv – riparia (Lat.) போன்ற சொற்களில் காண்க.
கீழை, மேலை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் உள்ள upa, upari (Skt.), up, sub, super, hyper, over (Eng.) ஆகிய சொற்கள் அனைத்தும் தமிழின் உயர்வுப்பொருள் தரும் ‘உப்பு-உவர்’ ஆகிய அடிவழிப் பிறந்தவை. ஆயின், பொக்குரோனி அகராதி, வாட்கின்சு அகராதி, இணையவழி வேர்ச்சொல் அகராதி போன்ற மேலை இந்தோ-ஐரோப்பிய அகராதிகள், upa(Skt.), up, sub (Eng.) போன்ற சொற்களை *upo (under, up from under, over) என்ற வேரிலிருந்து பிறந்தவை என்றும் upari(Skt.), super, hyper, over (Eng.) போன்ற சொற்களை *uper(over) என்ற வேரிலிருந்து பிறந்தவை என்றும் தனித்தனி வேராகக் காட்டியுள்ளனர். வேர்ச்சொல் அறிஞர் கீற்று, இவ் இரண்டு வேர்களுக்கும் (*upo, *uper) பொது உறவு காட்டி ஒன்றாக்கியுள்ளார்.
ஓவர்
'அண்டர்' (அடியில்), 'ஓவர்' (மேலே) என்ற வார்த்தைகளின் பொருட்கள் வினோதமாகக் கலக்கப்பட்டிருக்கின்றன. லத்தீனிலும் இது மாதிரி ‘சப்’ என்பதற்கு ’அண்டர்’ (அடியில்) என்ற பொருளையும், ‘சூப்பர்’ என்பதற்கு ‘அபவ்’ (மேலே) என்ற பொருளையும் கலந்துக் கொடுத்திருக்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் ’அருகாமை’ என்ற பொதுவான பொருளைக் கொடுப்பதன் மூலம் இந்த வினோதத்தை விளக்கலாம். இரண்டு இணையான கிடைமட்டக் கோடுகளை அருகருகே வரைந்தால், கீழ் ஒன்று மேல் ஒன்றுக்கு நெருக்கமாக உள்ளது என்று சொல்கிறோம்; கூரையை நோக்கி எறியப்படும் பந்து எப்போதும் அதன் அடியில்தான் இருக்கும். - ஸ்கீட்
உகரச் சுட்டு
தமிழின் உகரச்சுட்டு, வாய் இதழினை முன்னோக்கிக் குவித்துச் சொல்வதால் பிறப்பது. இதன் காரணமாக, ‘முன்னோக்கியது’ என்னும் பொருளில் சொற்கள் பலவற்றை உகரச்சுட்டு தோற்றுவித்தது. உதை, உந்து, உப்பு, உகப்பு, உயர்வு, உம்பர் (உயரத்தில் இருக்கும் மேலுலகம்), உப்பரிகை (மேல் மாடம்), உத்தரியம் (மேலாடை), உத்தரவு (உயர்ந்த மேலிடத்திலிருந்து வருகின்ற ஆணை) , உத்தரம் (வீட்டின் மேலுள்ள உறுப்பு); உவணம் (உயரத்தில் வானத்தில் பறக்கும் பருந்து) போன்ற பல சொற்களைப் பாவாணர் இதற்கு எடுத்துக்காட்டுவார். தொல்காப்பியத்தின் ‘உகப்பே உயர்தல்’(தொல்.சொல்.305) என்ற நூற்பாவும் இப் பொருளது.
உ-உக-உகத்தல் = உயர்தல்/மேலெழும்புதல் (‘மாவிசும்பு உகந்து முழங்குகால் பொருத மரம்’, (பெரிய வான் நோக்கி ஓங்கி வளர்ந்த மரம்), மதுரைக்.334); உ-உக-உகர்-உவர்-உவர் = உப்பு விளையும் நிலம்(‘உவர்நிலம்’, (உப்பு விளையும் நிலம்), புறம்.142:2); உ-உக-உகர்-உவர்-உவர்+இ-உவரி = காய்ந்த நீரிலிருந்து மேலெழுந்த உப்பு, உப்பினைக் கொண்ட கடல் (‘ஒலித்தக்கால் என்னாம் உவரி’, கடல்போல் ஒலியெழுப்பி என்ன பயன்?, குறள்.763). க-வ மாற்றம். ஒ.நோ. தகப்பன் – தவப்பன்; மகன் – மவன்; உ-உப்பு-உப்புதல் = மேலெழுதல்; உ-உப்பு-உப்பு+இதம்-உப்பிதம்-உப்பிசம் = வயிறு வீங்கி முன்வரும் நோய்; உ-உப்பு-உப்பு+அர்-உப்பர்-உப்பரிகை = மேல்மாடம்; உ-உப்பு-உப்பு+அர்-உப்பர்-உம்பர் = உயரத்திலிருக்கும் மேல் உலகம், மேல் உலகத்திலுள்ள தேவர் (‘உம்பர்கட்கு அரசே’, திருவாச.பிடித்த.1:1); உ-உப்பு = கடல்நீர் ஆவியாவதால் மேலெழுந்து தோன்றும் உப்புப் படிமம். (‘கடல்நீர் உப்பு’, அகம்.295:9; ‘உவர்விளை உப்பு’, நற்.138:1; ‘உப்புவிளை கழனி’, குறுந். 269:6); உ-உப்பு-உப்பு+மண்-உப்புமண்-உமண் = உப்பு; உ-உப்பு-உப்பு+மண்-உப்புமண்-உமண்-உமணர் = உப்பு வணிகர்; உ-உப்பு-உப்பு+அளம்-உப்பளம் = உப்பு விளைவிக்கும் இடம்; உ-உப்பு-உப்பு+அர்-உப்பர் = உப்பு விளைவிப்பவர் (பிங்.150).