‘இல்’ என்னும் தமிழ் வேர், கூடுதல், பொருந்துதல் என்னும் பொருள் தருவதாகும். ‘வீட்டில் இருந்தான்’, ‘வீட்டின் இருந்தான்’ என்ற இத் தொடரில் ‘இல்’ இடப்பொருள் குறிப்பதாகும். இவ் ‘இல்’ சொல்லின் திரிபே ‘வீட்டின் இருந்தான்’ என்பதன் ‘இன்’ ஆகும். கூடுதல் பொருளில் பிறந்த ‘இன்’ ஆகிய இச் சொல், மேலை இந்தோ-ஐரோப்பிய இலத்தீன், பழைய ஐரீசு, பழைய ஆங்கிலம் ஆகியவற்றில் ‘in’ எனவும் கிரேக்கத்தில் ‘en’ எனவும் வெல்சு(Welsh) மொழியில் ‘yn’ எனவும் பழந்தேவாலய சுலவானிக்(Old Church Slavonic) மொழியில் ‘on’ எனவும் திரிந்து தமிழில் உள்ளவாறே இடப்பொருளில் வழங்குகிறது.
கீழை இந்தோ-ஐரோப்பியச் சமற்கிருதத்தில் ‘antara’(interior) என வழங்குவதை மேலை இந்தோ-ஐரோப்பியத்தின் ‘in’, ‘en’, ‘yn’, ‘on’ ஆகிய வடிவங்களுடன் உறவுபடுத்தி இணையவழி வேர்ச்சொல் அகராதி கூறுகிறது. சமற்கிருத வேர்ச்சொல் அகராதி அறிஞர் மானியர், சமற்கிருத ‘antara’ சொல்லினை கோதிக்(Gothic) மொழியின் anthar சொல்லுடனும் லுத்துவேனிய(Lithuanian) மொழியின் antra-s சொல்லுடன்னும் இலத்தீனின் ‘alter’ சொல்லுடனும் உறவுபடுத்தியுள்ளார்.
இடப்பொருள் குறித்த ‘இன்’ ஆகிய இச் சொல், சமற்கிருதத்தில் ‘இந்’ எனத் திரிந்து பின்னர் எழுத்திடப் பெயர்ப்பு நெறியில், இந் – in – ni என மாற்றம் பெற்று உடன்பாட்டுப் பொருள்தரும் முன்னொட்டாக ஆனது எனப் பாவாணர் விளக்கியுள்ளார் (வடமொழி வரலாறு-2, ப.140). எ.கா.: நிஜம் (ni-ja).
இன்மைப்பொருள் தரும் ‘இல்-இன்’வழிப் பிறந்த ‘in’ சொல்லும் இடப்பொருள் தரும் ‘இல்-இன்’வழிப் பிறந்த ‘இந்(in)’ சொல்லும் சமற்கிருதத்தில் ‘நி(ni)’ எனத் திரிந்து ஒரே வடிவைப் பெற்றன. ‘ni’ ஆகிய வடிவம் ‘nir’ எனவும் சமற்கிருதத்தில் திரிவதாயிற்று. இவ்வாறு, சமற்கிருதத்தில் ‘ni’, ‘nir’ ஆகிய முன்னொட்டுகள் இரண்டிரண்டு நிலைகளில் உருவாகியுள்ளன. தமிழின் வழியில் எவ்வாறு ‘ni’, nir’ ஆகிய சொற்கள் இடப்பொருளிலும் எதிர்மறைப் பொருளிலும் சமற்கிருதம் இப் பொருள்களைப் பெற்றது என்பதை நம்மால் விளக்கமுடிகிறது. மூலமொழியாகிய தமிழின் வழி, இவ் வரலாற்றினை அறியமுடியாத மானியர், ‘ni’, ‘nir’ என்பன சில இடங்களில் இடப்பொருளிலும் சில இடங்களிலும் எதிர்மறைப் பொருளிலும் வரும் எனச் சொல்லி நகர்ந்துவிட்டார்.
‘இல்-இன்’ பொருந்துதல் பொருள் உருபு
இல் – இய் – இயை – இயைதல் = பொருந்துதல் (‘சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்’, தொல்.சொல்.396; ‘பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல்’, குறள்.573); இல் – இய் – இயை – இசை – இசைதல் = பொருந்துதல் (‘இசைந்த பாடல் இசையுடன் படுத்து’, சிலம்பு.புகார்.அரங்கேற்று.28); இல் – இள் – இண் – இணை – இணைதல் = சேர்தல் (‘நீலத்து இணைமலர் புரையும் உண்கண்’, புறம். 111:3)
‘இல்’ என்னும் பொருந்துதல் பொருள் சொல், ‘இன்’ எனவும் திரிந்து அதே பொருளில் வழங்குகின்றது. எ.கா.: ‘நிலத்தின் கிடந்தமை கால்காட்டும்’, குறள். 959.
பொருந்துதல் பொருள் இடப்பொருள் உறவு
உலகில் உள்ள பொருள்கள் யாவும் ஏதேனும் ஓர் இடத்துடன் பொருந்தியே தங்கியுள்ளன. இதன் அடிப்படையில், பொருந்துதல் பொருளும் இடப்பொருளும் உறவுடையன ஆகின்றன. பொருந்துதல் பொருள் வேராகிய ‘இல்-இன்’ என்பன ‘வீட்டில் இருந்தான்; வீட்டின் இருந்தான்’ என இடப்பொருள் உருபாகப் பயன்படுத்தப்படுகின்றன.
‘கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்’, (தோகையை உடைய மயில் கூட்டில் தளர்ந்தாலும்), மலை. 235; ‘புகார்நகர் அதுதன்னில்’, (புகார்நகராகிய அதனிடத்தில்), சிலம்பு.புகார்.மங்கல.22. என்ற இடங்களில் ‘இல்’ சொல்லும், ‘விசும்பின் துளி’ (முகிலிடத்துள்ள மழைத்துளி), குறள்.16; ‘களரின் நரி’, (களரிடத்து உள்ள நரி), குறள்.500 என்ற இடங்களில் ‘இன்’ சொல்லும் இடப்பொருளில் ஆட்சிபெற்றுள்ளமை காண்க.
இல் – இன் – இந் – நி - ni (Skt.)
பொருந்துதல் பொருளிலிருந்து பிறந்த ‘இன்’ என்னும் இடப்பொருள் குறிக்கும் இச் சொல், சமற்கிருதத்தில் இல் – இன் – இந் – நி - ni (Skt.) என எழுத்திடப் பெயர்ப்பு முறையில் திரிந்து தமிழில் பெற்ற அதே பொருளைச் (into, within) சமற்கிருதத்திலும் பெற்றுக்கொண்டது. நி+ஜம் – நிஜம் (தோன்றியுள்ளது); நி+ரூபி-நிரூபி (உருவுடன் இணைத்துக் காட்டு).
குறிப்பு:
சமற்கிருதத்தில் ‘ni’ என்னும் முன்னொட்டு, இன்மைப் பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனை ‘இன்(இன்மைப்பொருள்)’ சொல் வரலாற்றில் காண்க.