தமிழின் ‘அ, இ, உ’ என்னும் மூன்று சுட்டுகளினும் ‘இ’ என்பதற்கு மேலிருந்து இறங்கிவருதல் என்னும் பொருள் உருவாகியுள்ளது. இவ் ‘இ’ சுட்டின்வழிப் பிறந்த ‘இழிதல், இகுதல், இடுதல்’ போன்ற சொற்களில் இப் பொருளினைக் காணலாம். ‘இ’ என்னும் இச் சுட்டு, ‘ஈ’ என நீண்டு, ‘ஈன்-ஈனுதல்’ ஆகிய சொற்களைப் பெற்றது. பறவைகள் முட்டையிடும்போது, அம் முட்டைகள் அவற்றின் பிறப்புறுப்பிலிருந்து கீழ்நோக்கி இறங்கி வருதல் காரணமாக அவ் வினை, ‘ஈ-ஈன்’ என அழைக்கப்பட்டது. ‘கான மஞ்ஞை அறை ஈன் முட்டை’(குறுந்.38:1) என்பது சங்கத்தொடர். பறவைகளைப் போலவே விலங்குகளும் பேறுகாலத்தில் தம் மகவினைப் பெறும்போது அம் மகவு கீழ்நோக்கி-நிலம்நோக்கி இறங்கிவருதல் காரணமாக அதுவும் ‘ஈன்-ஈனுதல்’ எனச் சொல்லப்பட்டது. ‘நின்நாட்டு இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ’(புறம்.130:1-2) என்ற புறநானூற்றில் பெண்யானை மகவு பெற்றெடுத்தல் ‘ஈனுதல்’ வினையால் சொல்லப்பட்டுள்ளது. ‘ஈன்’ என்னும் இத் தமிழ், ஆங்கிலோ-சாக்சனில்(Anglo-Saxon) அதே பொருளில் ‘yean’ என வழங்கப்படுகிறது.
‘இகர-சிகர’ மாற்றத்தில் இகரத்தின் நெடிலான ‘ஈ’வழி வந்த ‘ஈன்’ சொல், ‘gene’ என மேலை இந்தோ-ஐரோப்பியத்தில் பிறப்பித்தலைக்(give birth, beget) குறிக்கும் சொல்லாகச் சென்று சேர்ந்தது. ‘ஈன்’ சொல்வழிப் பிறந்த ‘gene’ என்னும் சொல், சகர-ககர மாற்றத்தில் ‘kin, king, kind’ முதலான சொற்களைத் தருவதாகப் பின்னர் விரிந்தது.
கீழை இந்தோ-ஐரோப்பியச் சமற்கிருதம், janati "begets, bears," janah "offspring, child, person," janman- "birth, origin," jatah "born;" என்ற வடிவங்களில் தமிழின் ‘ஈன்’ சொல்வழிச் சொற்களை உருவாக்கிக் கொண்டுள்ளது.
இகர-சிகர மாற்றத்தின் ஒலித்திரிபு நுட்பம், ‘தமிழ்-இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல் களஞ்சியம் ஒப்பீட்டு அகராதி, தொகுதி-1’இல், ‘இகர உயிரில் அரை மெய்’ பகுதியில்(ப.15) விளக்கப்பட்டுள்ளது.
வேர்ச்சொல்: இ (பொருள்: கீழிறங்குதல்)
இ – இழி – இழிதல் = மேலிருந்து கீழ்வந்து சேர்தல் (‘நெடுங்கோட்டு இழிதரு தெண்ணீர்’, குறிஞ்சிப்.54; ‘ஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன்’, ஐங்.220:2; ‘இழிதரும் அருவி’, முருகு.316; ‘தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை’, குறள்.964); இ – இகு – இகுதல் = மேலிருந்து கீழ் வந்து சேர்தல் (‘இகுபெயல்’, சிறுபாண்.13; ‘கான்யாற்று இகுகரை’, குறுந். 264:1; ‘இகுதரும் கண்ணீர்’, கலித்.144:3-4); இ – இடு – இடுதல் = மேலிருந்து ஒரு பொருளினைக் கீழே சேர்த்தல் (‘ஆதிரை பிச்சை இட்ட காதை’, மணிமேகலை; ‘இட்டார் பெரியோர்’, நல்.2; ‘கோழி முட்டை இடுதல்’-உலக வழக்கு).
இ – ஈ – ஈதல்
இ – ஈ – ஈதல் = உயர்ந்த ஒருவன் தன்னினும் தாழ்நிலையில் இருப்பவனுக்கு ஒன்றினைக் கொடுத்தல் (‘ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே’, தொல்.சொல்.445; ‘ஈதல் இசைபட வாழ்தல்’, குறள். 231)
இ – ஈ – ஈன் – ஈனுதல்
இ – ஈ – ஈன் – ஈனுதல் = பெண்ணினத்தின் பிறப்புறுப்பிலிருந்து முட்டை, குட்டி போன்றவை கீழ்வந்து நிலம் சேர்தல் (‘கான மஞ்ஞை அறை ஈன் முட்டை’, குறுந்.38:1; ‘ஆரல் ஈன்ற ஐயவி முட்டை’, புறம் 342:9; ‘இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ’, புறம்.130:1-2; ‘பகட்டு ஆ ஈன்ற கொடுநடைக் குழவி’, பெரும்பாண். 243; ‘புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை’, நற்.355:1; ‘வயிறுமாசு இலீஇயர் அவன் ஈன்ற தாயே’, பதிற்.20:28).
ஈன் – இனம்
இ – ஈ – ஈன் – இனம் = பிறப்பில் தன்னை ஒத்த உயிரினத்தின் கூட்டம் (வேரும் விரிவும்-1, ப.42, அருளி, ப.) (‘வண்டினம்’, மதுரைக். 574; ‘புள்ளினம்’, குறிஞ்சிப். 228; ‘முசு இனம்’, அகம் 267:9; ‘யானை செல் இனம்’, அகம். 323:9; ‘சான்றவர் இனம்’, கலித். 39:48; ‘இனம்போன்று இனமல்லார்’, குறள்.822)
ஈன் – இனம்: நெடில் குறிலாதல். ஒ.நோ.: நீ – நின்; தா(தருதல்) – தந்தான், *dō-, Proto-Indo-European root meaning "to give."; சா (இறத்தல்) – சத்தான் – செத்தான்; வணங்கு – வாங்கு – வங்கு=வளைவு.
குறிப்பு:
வண்டினம், பறவையினம், மக்களினம் என வரும் ‘இனம்’ சொல், ஈனுதல் வழியாகவே கூட்டப்பொருள் பெற்றது.