‘கை’ என்னும் உடலுறுப்புச் சொல்லிலிருந்து ‘ஐந்து’ என்னும் எண்ணினைக் குறிக்கும் சொல் பிறந்திருக்கவேண்டும் எனப் பாவாணர் கூறினார். ‘கை’ ஆகிய உயிர்மெய் எழுத்துச்சொல், ககர மெய் நீங்கி, ‘ஐ’ என வந்திருக்கவேண்டும். இவ்வாறான மாற்றம் பல சொற்களில் நிகழ்ந்துள்ளது. ‘வணங்கு’ என்ற வளைதல் குறித்த சொல், ‘வாங்கு’ என நீண்டு, பின் ‘வங்கு’ என்றாகி அதுவே பின்னர் ‘அங்கு’ என்னும் வளைதல் பொருள்தரும் சொல்லாக மாறியது. ‘சர்க்கரை’ என்ற சொல், ‘அக்கார’ என மாறியதிலும் இம் மாற்றமே நிகழ்ந்தது. ‘கபி’ ஆகிய குரங்கினைக் குறித்த சொல், அதன் ‘ககர மெய் நீங்கி அபி-ape என ஆனதை சி.டி.ஆனியன் எழுதியுள்ளார்.
‘செய்தல்’ என்னும் வினையின் அடிச்சொல்லாகிய ‘செய்’ என்பது, சகர-ககர மாற்றத்தில் தமிழில் ‘கை’ என்ற உடலுறுப்புச் சொல்லைத் தோற்றுவித்தது. ஒரு கையில் ஐந்து விரல்கள் இருப்பது கருதி, ‘கை’ என்னும் இச் சொல்லிலிருந்து ‘ஐ’ என்னும் சொல் ஐந்தினைக் குறிக்கும் எண்ணுப்பெயரையும் பெற்றது. இவ் ‘ஐ’ ஆகிய சொல், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஐ-ஐது எனப்பட்டது. தமிழில் இது ‘ஐந்து’ எனவும் மலையாளத்தில் añcu எனவும் கொடகு மொழியில் añji எனவும் கொலாமி மொழியில் anj எனவும் வழங்கப்படுகிறது.
ஐந்து குறுநில மன்னர்களை வென்று ஆண்டமை கருதிப் பாண்டியர்கள் ‘பஞ்சவர்’ எனப்பட்டனர் என்பார் பாவாணர். ‘பழியொடு படராப் பஞ்சவ வாழி’ என்ற சிலப்பதிகார அடியின் ‘பஞ்சவன்’ சொல் பாண்டிய மன்னனைக் குறிக்கின்றது. ‘அப்பா’ என்னும் தமிழ் மேலை இந்தோ-ஐரோப்பியத்தில் ‘papa’, ‘pope’ எனத் திரியும் திரிபினை இவ் அஞ்சு – பஞ்சு ஆகிய அகர-பகரத் திரிபிற்கு ஒப்புநோக்கி உரைக்கலாம். மேலும், ‘அப்பளம்’ என்ற தமிழ், மலையாளத்தில் அப்பளம் – அப்படம் – பப்படம் எனத் திரியுமிடத்திலும் இவ் அகர-பகரத் திரிபினைக் காணலாம்.
தமிழில் இவ்வாறு தோன்றிய ஐந்து-அஞ்சு-பஞ்ச என்னும் சொல், சமற்கிருதத்தில் pañca என்ற வடிவில் எண் ஐந்தினைக் குறித்தது. இந்த pañca ஆகிய கீழை இந்தோ-ஐரோப்பியச் சமற்கிருதச் சொல்லிலிருந்தே ‘penta’ என்னும் ஐந்தினைக் குறிக்கும் சொல் தோன்றியதாக மேலை இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல் அகராதிகள் குறிக்கின்றன. ‘penta’ என்ற இம் மேலை இந்தோ-ஐரோப்பிய வடிவம், fif (Old English); vijf ((Dutch); funf (Old High German) five (English) என்றும் திரிந்தது.
‘ப’ ஆகிய இதழ்வெடிப்பொலி (Labial Plosive), ‘f’ என்னும் உரசொலி வடிவம் பெறுவதைப் பதி – பதம் – பாதம் – patha (Skt.) – pad (Avestan) – padas (Lithuanian) – fotus (Gothic) – fot (Old English) – foot (English); பைய (சிறியது) – pais (Greek) – paucas (Latin) – feawe (Old English) – few (English); பல – polys (Greek) – plus (Latin) – pilus (Lithuanian) – plunu (Old Church Slavonic) – filu (Gothic) – feola (Old English) – full, fill, fulfil (English); பேசு – பாஷை (சமற்.) – pheme (Greek) – fama (Latin) – fame, famous (English) போன்ற எடுத்துக்காட்டுகளில் அறியலாம்.
செய் – வினைச்சொல்
செய் = செய்தல் வினை (‘பொன் செய் பாண்டில்’, ஐங்.316:1); செய் = செய்யபப்ட்ட நிலம் (‘செய்ம் மேவல் சிறுகட் பன்றி’, நற்.98:2; ‘ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது’, திருமந்.188:1).
செய் – கெய் – கை (செயல்)
செய் – கெய் – கை = செயல் (‘கை அறியாமை’, குறள்.925; ‘கையறியாப் பேதை’, குறள்.836); கையறுதல் = செயலறுதல் (‘கையறு காலை’, செயலற்ற நேரம், தொல்.பொருள்.232).
செய் – கெய். சகர-ககர மாற்றம். ஒ.நோ. சீர்த்தி – கீர்த்தி; செம்பு – கெம்பு; செதிள் – கெதிள்.
செய் – கெய் – கை (வினை செய்யும் உடலுறுப்பு)
செய் – கெய் – கை = வினை செய்யும் உடலுறுப்பு (‘கைசெய்தூண் மாலை யவர்’, குறள்.1035; ‘செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை’, முருகு.5).
ஒ.நோ.: பண் – பாணி (கை)
பாணி = கை. பண்ணுவது பாணி. ஒ.நோ. செய்வது செய். செய் (தெ.) = கை. செய் – (சை) – கை (த.) (செய்கை – சைகை)
ஒப்பியன் மொழிநூல்-1, ப.193
சக்கரபாணி, தண்டபாணி ஆகிய வழக்குளில் உள்ள ‘பாணி’, கைகளைக் குறிக்கும். ‘பாணி’ சொல் பற்றிய விரிவான விளக்கத்தினைப் ‘பண்’ சொல் வரலாற்றில் காண்க.
கை – ஐ – ஐது – ஐந்து (எண்)
கை = ஐந்து
கை = ஐந்து. ஒரு கையில் ஐந்து விரலிருப்பதால் கை என்னும் சொல் ஐந்து என்னும் எண்ணைக் குறித்தது. இன்றும், வறட்டி விற்கும் பெண்டிர், ஒவ்வோர் ஐந்தையும் ஒவ்வொரு கை என்று சொல்லுதல் காண்க. கை என்னும் சொல்லின் மெய்ந்நீக்கமே ஐ என்பதும்.
தமிழ் வரலாறு-1, ப.150
கை – ஐ – ஐது – ஐந்து = ஓர் எண் (கை – ஐ, முதல் மெய்ந்நீக்கம். ஒ.நோ. கபி – ape, C.T. Onions; சர்க்கரை – சக்கரை – சக்கார அடிசில் – அக்கார அடிசில்; வணங்கு – வாங்கு – வங்கு – அங்கு; ‘நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும்’, தொல்.பொருள்.மரபி.89:1; ‘ஐந்து என’, பரி.3:78).
ஐந்து – அஞ்சு (ஒ.நோ.: காய்ந்து – காய்ஞ்சு - காஞ்சு; நைந்து – நைஞ்சு – நஞ்சு, உ.வ.)
ஐந்து – அஞ்சு = ஓர் எண் (‘அஞ்சிலே ஒன்று பெற்றான்’, கம்ப.பால.10; ‘அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே’, தேவா.சம்:3034:4).