வேர்ச்சொல்: கல் (பொருள்: கூட்டம்)
கல் – கல – கலத்தல் = சேர்த்தல் (‘பாலொடு தேன் கலந்து அற்றே’, குறள்.1121; ‘கலப்பேன்கொல்’, குறள்.1267). கல் – கல் + து – கற்று – கற்றை = திரள் (‘கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பு’, பெரும்பாண்.150); கல் – கள் – களம் = வயற்களம் (‘பெருங்களம் தொகுத்த உழவர்’, அகம்.30:8); போர்க்களம் (‘களம்புகல் ஓம்புமின் தெவ்விர்’, புறம்.87:1); ஆடுகளம் (‘யானுமோர் ஆடுகள மகளே’, குறுந்.31:4); கல் – கள் – கண் – கணம் = கூட்டம் (‘மான்கணம்’, புறம்.90:3); கல் – கள் – கள் + து – கண்டு = பொருள் திரட்சி (‘வாயூறு கண்டு’, தாயு.சித்தர்.8:1); கல் – கள் – கள்+து – கட்டு – கட்டுதல் = பிணைத்தல் (‘பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்’, குறுந்.21:2); கல் – கள் – கள் + து – கட்டு – கட்டி = பொருள் திரட்சி (‘தேம்பூங் கட்டி’, குறுந்.196:2); ‘கல்’ வேரிலிருந்து தோன்றும் கூட்டக்கருத்துச் சொற்கள் பற்றிய விரிவான விளக்கத்திற்குக் ‘கடு’(வலிமை) சொல் வரலாறு காண்க.
கூட்டக்கருத்தில் கூர்மைக்கருத்து
கூட்டக்கருத்தில் கூர்மைக்கருத்துப் பிறக்கும். ஒரு பொருளினைப் பிறிதொரு பொருளுடன் நெருக்கித் தேய்ப்பதன்வழி உருவாவது கூர்மை ஆகும்.
கல் – கற் – கர் – கரு – கரு + கு – கருக்கு = அறுத்தல் கருவிகளிலும் பனைமட்டை போன்ற நிலைத்திணைகளின் விளிம்புப் பகுதியிலும் அமைந்திருக்கும் கூர்மைத்தன்மை (‘பைங்காற் கருக்கு’, குறுந்.281:1; ‘பனைத்தலைக் கருக்கு உடை நெடுமடல்’, குறுந்.372:1); கல் – கற் – கர் – கரு – கரு+இ – கருவி (‘மயிர்குறை கருவி’, பொருநர்.29; ‘கவைமுள் கருவி’, முல்லைப்.35); கூர்மைப் பொருளில் பிறந்த ‘கருவி’ என்னும் சொல், மக்கள் வாழ்க்கையில் கூரிய ஆயுதங்களைக் குறித்ததற்கும் அப்பால், அன்றாட வாழ்வுடன் ஒரு முதன்மைப் பொருளாகவும் துணைப்பொருளாகவும் ஆனது. அதன் காரணமாக, ‘கருவி’ என்னும் சொல், வாழ்விற்கு முதன்மையான அறிவினைக் குறிக்கவும் தமிழில் ஆளப்பெற்றுள்ளது. ‘அறிவு அற்றங் காக்கும் கருவி’ (குறள்.421) என்னும் குறளில் ‘அறிவு’ கருவியானது. வாழ்வின் பல நேரங்களிலும் துணையாகும் பொருள்களும் பின்னர்க் ‘கருவி’ எனப்பட்டுள்ளன. ‘அருவினை என்ப உளவோ கருவியாற் காலம் அறிந்து செயின்’ (குறள்.483) என்னும் குறளின் ‘கருவி’, துணைப்பொருளானதற்கு எடுத்துக்காட்டு; பணிகள் பலவற்றுக்கும் கருவிகள் காரணம் ஆதலால், இலக்கணத்தில் மூன்றாம் வேற்றுமை கருவிப்பொருள் வேற்றுமை எனவும் சொல்லப்பட்ட பொருள் வளர்ச்சி பெரிதும் வியத்தற்குரியது. (‘மூன்றா குவதே ஒடு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைமுதல் கருவி அனைமுதற்றதுவே’, தொல்.சொல்.73); கல் – கள் – கள் + இ - கள்ளி = கூர்மையான முட்செடி (‘கவைமுட் கள்ளி’, குறுந்.174:2); கல் – கள் – கண் – கணிச்சி = கூர்மையான மழு ஆயுதம் (‘கணிச்சிக் கூர்ம்படை’, புறம்.195:4); கல் – கள் – கண் – கணை = கூரிய அம்பு (‘பொருகணை’, பெரும்பாண்.70); கல் – கள் – கள்+து – கடு = கூர்மை (‘கடுநுனைப் பகழி’, தொல்.சொல்.378, தெய்வ.உரை); கடு-கர-*ker (horn, head) - keros – ceros – rhinoceros. ஒ.நோ. காண்டாமிருகம்; கல் – கள் – கள்+து – கண்டு – கண்டம் –காண்டம் – காண்டா மிருகம் = மூக்கில் கொம்புடைய மிருகம். ஒ.நோ. rhinoceros; கல் – கள் – கள்+து – கண்டு – கண்டி = கூர்மையான உருத்திர அக்கமணி (‘கண்டியிற் பட்ட கழுத்திடையீர்’, தேவா.அப்.928:1); கல் – கள் – கள்+து – கண்டு – கண்டல் = முள்ளுடைய தாழை(‘கண்டல் வேலி’, நற்.191:5); கல் – கள் – கள்+து – கண்டு – கண்டம் – கண்டங்கத்திரி = சிறிய முட்செடி; கல் – கள் – கள்+து – கண்டு – கண்டம் – கண்டபலா(சமற்.) = மேற்பகுதியில் முள்ளுள்ள பலாப்பழம் (ஒ.நோ.: ‘முட்புற முதுகனி’, புறம்.158:23).
kaṇṭa-phala m. N. of several plants (Asteracantha Longifolia; bread-fruit tree; Datura Fastuosa; Guilandina Bonduc; Ricinus Communis), L.
-Monier
கல் – கள் – கள்+து – கண்டு – கண்டகர் = முள் போன்ற கொடியவர்/பகைவர் (‘கண்டகர் உய்ந்தார் எவர்’, கம்ப. ஆரண்.மாரீச.11:4). திருக்குறள், பகைவரை முள் மரத்திற்கு உவமையாகக் கூறியுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது. (‘இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து’, குறள்.879)