தமிழில் பொருந்துதல் பொருள் தரும் வேர் ‘அம்’ என்பது. இவ் ‘அம்’ சொல், அம்முதல், அமல்தல் (‘வேய் அமல் அகலறை’, கலித்.45), அமைதல் (‘வழையமை சாரல்’, மலை.181), அமர்தல் (‘தன்னமர் ஒள்வாள்’, புறப்.வெண்பா.4:5), அமைதி (பொருந்திய தன்மை), அமலை (சோற்றுத் திரள்), அமர் (பலர்கூடிப் போர் செய்யும் இடம்) எனப் பல பொருந்துதல் பொருள் சொற்களைத் தோற்று வித்ததைப் பாவாணர், வேர்ச்சொற் கட்டுரைகள் நூலில் விளக்கியுள்ளார் (வேர்ச்சொற் கட்டுரைகள்-1, ப.3).
நீரினைக் குறிக்கும் ‘அம்’ சொல், நிலத்தோடு பொருந்தியிருக்கும் அதன் தன்மை கருதிப் பெயர் பெற்றதாகப் பாவாணர் அதே கட்டுரையில் எழுதி யுள்ளார். நீரினைக் குறித்த ‘அம்’ சொல், அழகிய சிறகினை உடைய வண்டினை ‘அம் சிறைத் தும்பி’ (குறுந்.2:1) என ‘அழகு’ என்ற பொருளையும் தமிழில் பெற்றுள்ளது. அழகிய சொற்களை ஔவையார் ‘அம்சொல்’(புறம்.) என்று குறித்த இடத்திலும் இவ் ‘அம்’, அழகுப் பொருள் தருவதாகும். நீர் நிறைந்த பகுதி அழகாக வளம் பெற்றிருக்கும் ஆதலால், நீரினைக் குறித்த ‘அம்’ சொல், தமிழில் பின்னர் அழகுப் பொருள் பெற்றதாகப் பாவாணர் எழுதியுள்ளார்.
நீரினைக் குறித்த ‘அம்’ சொல், ‘ஆம்’, ‘அம்பு’, ‘அப்பு’ என்றெல்லாம் திரிந்து அதே பொருளில் தமிழில் வழங்குகிறது. ‘அம்தாழ் சடையர்’ என்பது திருவெங்கைக்கோவை. நீர்நிறைந்த கங்கையைச் சுமந்த சடையினை உடைய சிவனைக் குறிப்பது இத் தொடர். ‘ஆம் இழி அணிமலை’ (கலித்.48:1), ‘ஆம் அறப் புலர்தல்’, அகம்.1:12 ஆகிய சங்கத் தொடர்களின் ‘ஆம்’, நீர் குறிப்பது. ‘அம்’ ஆகிய தமிழ், ‘அம்பு’ எனவும் திரிந்து கண்ணீரைக் குறிப்பதை ‘விழி அம்பு ஒழுகும் மாதர்’ என்னும் பட்டினத்தார் தொடரில் காண்கிறோம். ‘அம்பு’ ஆகிய இச் சொல், வலித்தல் ஒலி மாறுபாட்டில் ‘அப்பு’ எனவும் தமிழில் திரிவதுண்டு. ‘அப்பிலே தோய்த்து’ என்று இரட்டைப் புலவர்கள் ஆடைகளை நீரில் தோய்த்ததைக் குறிப்பிடு கின்றனர்.
‘அப்பு’ ஆகிய இச் சொல், நீர் நிறைந்த ஆற்றினை வட இந்திய மொழிகளில் குறித்தது. காவிரி, ஐந்து ஆறுகளாகப் பிரிந்து ஓடிய இடம் ‘ஐயாறு’ எனப்பட்டவாறு, சிந்து ஆறு ஐந்து கிளைகளாகப் பிரிந்து ஓடிய இடம் pañca+áp > pañjāb > Punjab எனப்பட்டது. தமிழின் ‘ஐந்து’ சொல், ஐந்து > அஞ்சு > பஞ்ச எனவும் ‘அம்’ சொல் ‘அப்’ எனவும் திரிந்து Punjab ஆனது. இவ்வாறு, இந்திய மொழிகளில் வழங்கும் சொற்களுக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் சொற்களுக்கும் மூலமொழி யாகிய தமிழிலிருந்து வரலாறு காண வேண்டும் என்ற முயற்சி நடைபெறாதது வருந்துதற் குரியது.
Punjab சொல்லின் வரலாற்றினைப் பின்வருமாறு இந்தோ-ஐரோப்பிய அறிஞர்கள் அறிஞர்கள் எழுதியுள் ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The name Punjab is of Persian origin, with its two parts (پنج, panj, 'five' and آب, āb, 'water') being cognates of the Sanskrit words पञ्च, pañca, 'five' and अप्, áp, 'water', of the same meaning.[2][12] The word pañjāb is thus calque of Indo-Aryan “pañca-áp” and means “The Land of Five Waters”, referring to the rivers Jhelum, Chenab, Ravi, Sutlej, and Beas. All are tributaries of the Indus River.
அம் > அம்பு > அப்பு ஆகிய நீரினைக் குறித்த தமிழ்ச்சொல், இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ap water (Sanskrit); ab (Old Irish); upė a river (Lithuanian); ahua river, waters (Gothic); akwanzi they drink (Hittite); ea river (Old English) என்றெல்லாம் திரிந்து நீரினையும் நீர்நிறைந்த ஆற்றினை யும் குறிக்கும் சொற்களாகியது.
நீரினைக் குறிக்கும் aqua சொல், ap சொல்லின் பிறிதொரு திரிந்த வடிவமென இணையவழி வேர்ச்சொல் அகராதி எழுதியுள்ளது.
dvī + ap > dvīpa பொருத்தமின்மை
இரண்டினைக் குறித்த இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் dvi, dva, two ஆகிய சொற்கள், ‘துமி’ ஆகிய தமிழ் வேரிலிருந்து பிறந்தன. இச் சொற்களின் வரலாற்றினைத் ‘துமி’ சொல் வரலாற்றுப் பகுதியில் காண்க. ‘தீவு’ என்னும் தமிழ்ச்சொல், நான்கு பக்கமும் நிலத் தொடர்பு இன்றி நீரினால் சூழ்ந்த பகுதியைக் குறிக்கும். நிலத்தொடர்பு தீர்ந்த பகுதியே தீர்வு > தீவு (ஒ.நோ.: கோர்வை > கோவை) என ஆனதாகப் பாவாணர் எழுதினார் (வடமொழி வரலாறு-2, ப.12). ‘தீவு’ ஆகிய இத் தமிழ்ச்சொல், சமற்கிருதத் தில் dvīpa எனத் திரிந்தது. dvīpa சொல்லின் வரலாற்றினைத் ‘தீர்வு’ சொல்லி லிருந்து வருவிக்காமல் dvī + ap எனப் பிரித்து இருபக்கமும் கடலால் சூழப்பட்ட பகுதி எனப் பொருள் உரைத்தனர். இருபக்கமும் நீர் சூழ்ந்த பகுதி ‘தீவு’ ஆகாது என்பதைக் கீழை இந்தோ-ஐரோப்பியச் சமற்கிருத அறிஞர்கள் அறியாமல் எழுதியுள்ளனர் என்பார் பாவாணர். ஆதலின், சமற் கிருதத்தின் dvīpa சொல்லினை dvī +ap எனப் பிரித்தது பொருத்தமில்லை.
aqua + land > island
தமிழின் அம் > அப்பு சொல்லி லிருந்து உருவான aqua சொல், நீர் நிறைந்த நிலப்பகுதியைக் குறிக்கும் aqua land சொல்லினைத் தோற்று வித்தது. இந்த aqua land சொல்லின் திரிபே தீவினைக் குறித்த island சொல் என்று மேலை இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல் அகராதி அறிஞர்கள் எழுதியுள்ளனர்.
நீர் நிறைந்த கடல், aquamarina என இலத்தீனில் அழைக்கப்பட்டது. பின்னர், aquamarine என அச் சொல் ஆங்கிலத்தில் திரிந்து கடல்நீர் போன்று நீல நிற வடிவமுடைய கல்லினைக் (bluish-green type of beryl) குறித்தது. aquamarina, aquamarine ஆகிய சொற் களின் ஈற்றுச்சொல்லாகிய marina, marine தமிழில் கடல் குறிக்க வழங்கிய ‘வாரணம்’ சொல்லின் திரிந்த வடிவ மாகும். இதன் விளக்கத்தை ‘வாரணம்’ சொல் வரலாற்றுப் பகுதியில் காண்க.
island: ஆக்சுபோர்டு ஆங்கிலப் பேரகராதி விளக்கம்
நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதியே தீவின் இலக்கணம் என ஆக்சுபோர்டு ஆங்கிலப் பேரகராதி கூறுகிறது (A piece of land completely surrounded by water). நான்கு பக்கமும் நிலத்தொடர்பு இல்லாமல் தீர்ந்த பகுதி தீர்வு > தீவு எனத் ‘தீவு’ சொல் லிற்கு வேர்ப்பொருளைப் பாவாணர் வரையறை செய்தார். இவ் இலக்கணம் island சொல்லிற்கு ஆக்சுபோர்டு ஆங்கிலப் பேரகராதி கூறிய வரை யறையுடன் பொருத்தமாக உள்ளது.
வேர்ச்சொல்: உம் (பொருள்: கூட்டம்)
உம் = எண்ணுப்பொருள் இடைச் சொல் (எ.கா.: அறமும் பொருளும் இன்பமும் வீடும்)
உம் > உமி = கூலங்களில் அரிசி பருப்பொடு கூடியிருக்கும் கூடு போன்ற மெல்லிய தொலி)
உம் > உமிதல் = இதழ் கூட்டித் துப்புதல்
உம் > அம் (உகர அகர மாற்றம், ஒ.நோ.: உரவு > அரவு > அரசு)
அம் > அமை > அமைதல் = நெருங்குதல் (‘வழையமை சாரல்’, மலை.181)
அம் > அமை > அமைதல் = ஓரிடத்தில் பொருந்தித் தங்கியிருத்தல் (‘மறந்து அவண் அமையார் ஆயினும்’, அகம்.37:1)
அம் > அமல் > அமலை=சோற்றுத் திரள் (‘பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை’, புறம்.177:14)
அம்-அமர்-அமர்தல்=விரும்புதல் (‘அமர்தல் மேவல்’, தொல். சொல். 380)
அம் > அம்மி = பொருந்தி அரைக்கும் கல்.
அம் = நிலத்தோடு பொருந்தும் நீர் (‘அம்தாழ் சடையார்’, வெங்கைக் கோவை.35)
அம் > அம்பு = நீர், கடல் (‘விழி அம்பு ஒழுக’, பட்டினத்தார்.54:1, ‘அம்பு ஏழும்’, திருப்புகழ் 102:6).
அம்பு > அப்பு = நீர். வலித்தல் வேறுபாடு. ஒ.நோ.: செம்பு > செப்பு; வெம்பு > வெப்பு.
குறிப்பு
‘அம்’ என்னும் தமிழ்வழிப் பிறந்த ‘அம்பு > அப்பு’ என்பன தமிழிலும் சமற்கிருதத்திலும் நீரினைக் குறிக்கும் ஆட்சிகளாகும். ‘த்வீப’(dvīpa) என்பது தீவினைக் குறிக்கும் சமற்கிருதச் சொல். இச் சொல்லினை dvī + ap என மானியர் பிரிப்பார். அதாவது, இரண்டு பக்கமும் கடலால் சூழப்பட்ட பகுதி என்பது இச் சொல்லிற்குரிய பொருள். dvīpa என்ற சமற்கிருதச் சொல்லினைத் ‘தீர்வு’ என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபாகப் பாவாணர் எழுதியுள்ளார். அதாவது, முற்றிலும் நிலத்தின் உறவு தீர்ந்து நீரினால் சூழப்பட்ட பகுதி ஆதலால், இது ‘தீர்வு-தீவு’ என்றாயிற்று என்பார்.
தீவு > த்வீப (இ.வே.)
தீர்தல் = நீங்குதல். தீர் > தீர்வு > தீவு = பெருநிலத்தினின்று நீங்கியிருக்கும் சிறுநிலம், ஒரு நிலத்தினின்று நீங்கி யிருக்கும் இன்னொரு நிலம். ஒ.நோ.: கோர்வை > கோவை.
தீவு > தீவம் > வ. த்வீப.
வடவர் த்வி+அப் என்று பகுத்து, இருபுறமும் நீராற் சூழப்பெற்ற தென்று பொருட்காரணங் கூறுவர். நாற்புறமும் நீராற் சூழப்பெற்ற தீவிற்கு இவ் விலக்கணம் பொருந் தாமை காண்க.
-வடமொழி வரலாறு-2, ப.12
இவ் உண்மை அறியாமல், இரண் டினைக் குறித்த dvī சொல்லுடன் dvīpa சொல்லை உறவுபடுத்தி மானியர் எழுதினார். இரு பக்கமும் நீர் நிறைந்த பகுதி ‘தீவு’ ஆகாது எனவும் பாவாணர் அவ் இடத்தில் குறிப்பிட்டார். dvī ஆகிய இரண்டினைக் குறித்த சமற்கிருதச் சொல், தமிழின் ‘துமி’ வேர்வழிப் பிறந்த வரலாற்றைத் ‘துமி’ சொல் வரலாற்றில் காண்க.
மேலை இந்தோ-ஐரோப்பிய ஆங்கிலத்தின் island சொல்லிற்கும் நான்கு பக்கங்களும் நீரால் சூழப்பட்ட பகுதி (thing on the water) என்பதே பொருளாகக் காட்டியிருப்பது குறிப் பிடத்தக்கது. தண்ணீரால் சூழப்பட்ட பகுதி என்னும் பொருளில் aqua+land என்பதன்வழி வந்ததே island
அம் > ஆம் = நீர் (‘ஆம் இழி அணிமலை’, கலித்.48:1; ‘ஆம் அறப் புலர்தல்’, அகம்.1:12)