‘இறுத்தல்’, தங்குதல் பொருள்தரும் தமிழ்ச்சொல். இச் சொல், ‘இல்’ என்னும் கூட்டக்கருத்து வேர்வழி உருவானது. ‘இறு-இறுத்தல்’ என்னும் சொற்களும் அவற்றின் வழி உருவான ‘இறை’ என்னும் சொல்லும் தொல்காப்பியக் காலம்தொட்டுத் தமிழில் தங்குதல் பொருளில் ஆளப்பெற்றுள்ளன. ‘இறை’ என்னும் சொல், ‘இகர-சிகர’ மாற்றத்தில் ‘சிறை’ எனவும் திரிந்து அதே தங்குதல் பொருளில் தமிழ்ச்சொல்லாக வளர்ந்துள்ளது. இகர-சிகர மாற்றத்தின் ஒலித்திரிபு நுட்பம், ‘தமிழ்-இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல் களஞ்சியம் ஒப்பீட்டு அகராதி, தொகுதி-1’இல், ‘இகர உயிரில் அரை மெய்’ பகுதியில்(ப.15) விளக்கப்பட்டுள்ளது.
தங்குதல் பொருள்தரும் ‘இறு-இறை’ என்னும் தமிழ்வடிவம், இலத்தீனில் ‘era’ எனத் திரிந்து பெண் தெய்வத்தையும், ‘erus’ எனத் திரிந்து ஆண் தெய்வத்தையும் குறித்துள்ளது. இகர-சிகர மாற்றத்தில் ‘era’ ஆகிய இச் சொல், இலத்தீனில் ‘servus’ என்றானது. இந்த ‘servus’ சொல்வழி வந்ததே ‘serve’ ஆகிய ஆங்கிலச் சொல்லாகும். சகர-ககர மாற்றத்தில் ‘ser’ ஆகிய இவ் வடிவம், ‘her’ எனத் திரிந்து ‘hero’ முதலான சொற்களை மேலை இந்தோ-ஐரோப்பியத்தில் பிறப்பித்தது.
‘இறை-சிறை’ சொல்லின் திரிபான ‘ser’, ‘sal’ என்னும் வடிவையும் ‘sol’ என்னும் வடிவையும் பெற்றுப் பாதுகாப்பது, பிரிவில்லாதது, முழுமையானது என்னும் பொருளில் மேலை இந்தோ-ஐரோப்பியத்தில் ஆளப்படுகிறது. மேலை இந்தோ-ஐரோப்பிய அறிஞர்கள், சமற்கிருதத்தின் ‘sarva’ சொல்லினை இலத்தீனின் salvus (uninjured, in good health, safe) சொல்லுடன் உறவுபடுத்தி எழுதியுள்ளனர். சமற்கிருத அகராதி அறிஞர் மானியர், ‘sarva’ சொல்லினை மேற்குறித்த மேலை இந்தோ-ஐரோப்பியச் சொல்லுடன் உறவுபடுத்தியுள்ளார்.
வேர்ச்சொல்: இல் (பொருள்: கூட்டம்)
இல்-இய்-இயை-இயைதல் = பொருந்துதல்; இல்-இள்-இண்-இணர் = பூங்கொத்து; இல்-இள்-இண்-இண்-இணங்கு = பொருந்து; இல்–இற்–இர்– இரு–இருப்பு-இருப்பிடம் = தங்குமிடம்.
ஒ.நோ.: தகு = பொருந்துதல் (‘நிற்க அதற்குத் தக’, குறள்.391; தகு - தங்கு – தங்கல்; தகு - தங்கு - தாங்கு – தாங்கல் = நீர் சேர்ந்து நிறைந்த இடம். தகு - தங்கு – தாங்கு – தா - *sta (PIE root ‘to stand, set down, make or be firm," with derivatives meaning "place or thing that is standing’, முன்மிகை) – ஸ்தானம், ஸ்தாபனம்; தகு - தங்கு – தாங்கு – தா - *sta (PIE root ‘to stand, set down, make or be firm," with derivatives meaning "place or thing that is standing’, முன்மிகை) – stay.
முன்மிகை - ஒ.நோ:
‘s’ முன்மிகையாகச் சேர்தல், எ.கா.: கல்(கல்லுதல்-தோண்டுதல்) - *kel (to cut) - *skel – half (இணையவழி வேர்ச்சொல் அகராதி); பொட்டு(இடம்) – spot (சுட்டு விளக்கம், பாவாணர், ப.38).
இல்-இற் – இறு – இறுத்தல் = தங்குதல்
இல்-இற் – இறு – இறுத்தல்=தங்குதல் (‘குன்றத்து இறுத்த குரீஇ இனம்’, புறம்.19:8; ‘ஆடுமழை இறுத்தது எம் கோடு உயர்குன்றே’, நற்.156:10; ‘புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை’, நற்.215:3; ‘வேறு புலத்து இறுத்த வெல் போர் அண்ணல்’, பதிற்.81:18; ‘அஞ்சுவர இறுத்த தானை’, அகம் 264:14; ‘ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து’, மது. 127; ‘வேற்றுப் புலத்து இறுத்து’, புறம் 31:12)
இல்-இற் – இறு – இறை = தங்குமிடம்
இல்-இற் – இறு – இறை = தங்குமிடம் (‘முற்றின் ஆகிய புறத்து இறை’, தொல். பொருள். புறத்:3; ‘இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த’, குறுந். 92:3; ‘குறி இறைக் குரம்பை பறி உடை முன்றில்’,பெரும். 265; ‘இறை உறை புறவின் செங்கால் சேவல்’, பெரும். 439; ‘புள் இறை கூரும் துறைவன்’, ஐங்.142:2).
இல்-இற் – இறு – இறை = எவ்விடத்தும் எப்பொருளிலும் தங்கியிருக்கும் பரம்பொருள்
இல்-இற் – இறு – இறை = எவ்விடத்தும் எப்பொருளிலும் தங்கியிருக்கும் பரம்பொருள் (‘அணங்கே விலங்கே கள்வர் தம் இறை எனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே’, தொல்.பொருள்.252)
இறை – இறைவன் = கடவுள் / அரசன்
இல்-இற் – இறு – இறை – இறைவன் = கடவுள் (‘இறைவன் பொருள்சேர் புகழ்’, குறள்.5; ‘இறைவன் அடி’, குறள்.10; ‘இளம்பிறை சூடிய இறையவன்’, சிலம்பு.மது:22:87; ‘நுதல்விழி நாட்டத்து இறையோன்’, சிலம்பு. மது.14:7)
இல்-இற் – இறு – இறை – இறைவன் = அரசன் (‘அவன் எம் இறைவன் யாம் அவன் பாணர்’, புறம் 316:4; ‘அஃது எம் ஊரே அவன் எம் இறைவன்’, புறம்.48:5)
இறை – சிறை
இல்-இற் – இறு – இறை – சிறை (இகர – சிகர மாற்றம். ஒ.நோ.: இமிழ்த்தல் – சிமிழ்த்தல்; இமை-சிமை; இஞ்சி-ginger; இறு – இற்று – இட்டு – சிட்டு = சிறியது; ஈன்-gene)
இல்-இற் – இறு – இறை – சிறை = தடுத்துத் தங்கவைக்கும் இடம் (‘மாண்சிறை’, நற்.132:7; ‘சாலி நெல்லின் சிறை’, பொருந. 246; ‘சிறை அரும் களிறு’, நற் 74:4; ‘வீழ் காவோலை சூழ் சிறை’, நற் 354:3; ‘சிறைவான் புனல்தில்லை’, கடல் நீரால் காக்கப்படும் தில்லை மாநகரம், திருக்கோ.20:1; ‘கோளொத்த சிறைவைத் தாண்ட கொற்றவன்’, கம்ப.யுத்.கும்ப.4:3).
இல்-இற் – இறு – இறை – சிறை = நீரைத் தடுத்து நிறுத்தும் அணை (‘வருவிசைப் புனலைக் கற்சிறை போல’, தொல்.பொருள்.63; ‘சிறை அடு கடும் புனல் அன்ன’, நற். 369:9-10; ‘நீர்மிகின் சிறையும் இல்லை’, புறம்.51:1; ‘சிறையும் தானே தன்இறை விழுமுறினே’, புறம். 314:7; ‘கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே’, புறம் 263:8)