‘வளர்தல், பெருகுதல்’ பொருள்தரும் தமிழ்ச்சொல் ‘ஆகுதல்’ என்பது. ‘நன்று ஆகும் காலம்’, ‘நன்று ஆம் கால்’ எனத் திருக்குறளில் இவ் ‘ஆகுதல்’ சொல் சுருங்கி வந்துள்ளது. ‘வேகும்-வேம்’; ‘நோகும்-நோம்’ என்றெல்லாம் திரியும் திரிபுகளில் ‘ஆகும் சொல் ‘ஆம்’ எனத் திரிந்த உறவினைக் காணலாம். ‘ஆகுதல்’ என்னும் தமிழ்ச்சொல், மேலை இந்தோ-ஐரோப்பிய லுத்துவேனிய(Lithuania) மொழியில் augu, augti (to grow) எனவும் இலத்தீனில் (Latin) augere (to increase, make big, enlarge, enrich) எனவும் வளர்தல், பெருகுதல் பொருளில் பல சொற்களைத் தோற்றுவித்தது.
வேளாண் குமுகத்தில் நிலத்தின் விளைச்சல் பெருகுவது வளத்தின் அடையாளம். சோழ வளநாடு எனச் சோழநாடு பெயர் பெற்றதற்கு அதன் நெல் விளைச்சலே காரணம். ‘விளைக வயலே’, ‘நெல்பல பொலிக’ என ஐங்குறுநூற்றில் விளைச்சல் பெருக வாழ்த்தும் மரபு உள்ளது. பண்டைய உரோம் நாட்டிலும் விளைச்சல் பெருகுவதற்காகச் சடங்குகள் செய்யப்பட்டன. இச் சடங்கினை ‘augur’ என்பர். பெருகுதல், மிகுதல் என்னும் பொருள் தரும் ‘augur’ சொல்லிலிருந்து மதிப்புமிகுந்த, மாட்சிமைக்குரிய பெரியோரைக் குறிக்கும் ‘Augustus’ சொல் தோன்றியதாகவும் வேர்ச்சொல் அகராதிகள் கூறுகின்றன. மதிப்புமிகுந்த, மாட்சிமைக்குரிய சீசரை, இதன் காரணமாகவே ‘Augustus Caesar’ என அழைத்தனர். சீசரைக் குறித்த ‘Augustus’ சொல்லை, பின்னர் அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘August’ என ஒரு மாதத்திற்கு உரியதாகவும் ஆக்கி அச் சொல்லை வரலாற்றில் பெருமைப்படுத்தினர்.
கூட்டக்கருத்தில் வளர்தல், பெருகுதல் கருத்துகளுடன் வலிமையாதல் கருத்தும் உருவாகும். ‘உறு’ என்னும் கூட்டக்கருத்துச் சொல், தமிழில் மிகுதிப்பொருளையும் அதே ‘உறு’ சொல், உறு-உற-உர-உரம் என வலிமைப்பொருளையும் தரும். ‘கல்’ என்னும் கூட்டக்கருத்துச் சொல், கல்-கள்-களி-கழி என மிகுதிப்பொருள் சொல்லை அளிக்கும். அதே ‘கல்’ வேர், கல்-கல்+து-கன்து-கந்து என வலிமைப்பொருள் சொல்லையும் தமிழில் தந்துள்ளது. இதே அடிப்படையில், வளர்தல், பெருகுதல் பொருள் தரும் ‘ஆகு’ சொல், சமற்கிருதத்தில் ojas எனத் திரிந்து வலிமைப்பொருளைத் தந்துள்ளது. மேலை இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல் அகராதி அறிஞர்கள், augu, augti, augere சொற்களுடன் சமற்கிருதத்தின் ojas சொல்லையும் இணைத்து உரைத்துள்ளனர். தமிழின் ‘பகு’, சமற்கிருதத்தில் ‘bhaj’ எனத் திரிந்ததைப் போல், தமிழின் ‘ஆகு’, சமற்கிருதத்தில் ojas எனத் திரிந்தது.
உகை
உ-உகு-உகை = முன் தள்ளுதல், செலுத்துதல் (‘ஓடுகலம் உகைக்கும் துறைவன்’, ஐங்.192:2-3).
உகை-அகை (உகர -அகர மாற்றம்)
உகை–அகை = தழைத்தல், வளர்தல் (‘கயம் அகைய வயல்’, மதுரைக்.92); ஒ.நோ.: உரவு–அரவு–அரசு–அரசன்; அகை–ஆகு-ஆவு-ஆவுதல் = வளர்தல், பெருகுதல். க-வ மாற்றம். ஒ.நோ. நோகுதல் – நோவுதல்; வேகுதல்-வேவுதல்; மகன்-மவன்; ஆகு – ஆகும் – ஆம் (‘நன்று ஆம் கால் நல்லவாக் காண்பவர்’, குறள்.379).