‘எல்லாம்’ என்பதற்குத் தமிழில் ‘முழுவதும்’ என்பது பொருள். ‘எல்லாம்’ என்ற முழுமைப்பொருள் தரும் சொல், தமிழில் தோன்றிய வரலாற்றைப் பாவாணர் விளக்குகிறார் (சுட்டு விளக்கம், ப.58-59). ‘எல்லாம்’ என்பது போல் ‘யாதும், யாவும், யாவையும், யாரும்’ என்ற சொற்களும் முழுமைப்பொருள் தருவனவாகும். ‘யாதும், யாவும், யாவையும், யாரும்’ ஆகிய சொற்களின் முன்பகுதி ‘யா’ என்னும் வினாச்சொல்லாகும். மேற்குறித்த சொற்களின் பின்பகுதியாகிய ‘உம்’ என்பது ‘கூடுதல், பொருந்துதல், சேர்தல்’ என்னும் பொருள்தரும் இடைச்சொல்லாகும்.
வினாப்பொருளும் சுட்டுதல் பொருளும்
‘யா’ என்ற வினாச்சொல், எதிரில் உள்ள பொருள்களைச் சுட்டுவதற்கு உரியதாகி அது ‘உம்’ என்ற கூடுதல், சேர்தல் பொருள்தரும் சொல்லுடன் சேர்ந்து, யாது + உம் – யாதும் என்றாகி எல்லாப் பொருள்களையும் குறிப்பதற்கு உரியதாக ஆகியது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
‘யாதும் ஊர்’ என்ற தொடரின் ‘யாதும்’ சொல் எல்லா ஊர்களையும் குறிப்பது இதனால்தான். இவ்வாறே ‘யா’ என்ற வினாவுடன் ‘அர்’ என்னும் பலர்பால் ஈறு சேர்ந்து, அவற்றின் இடையில் வகர உடம்படுமெய் தோன்றி, யா+வ்+அர் – யாவர் என்ற வினாச்சொல் உருவானது. பின்னர், ‘யாவர்’ என்ற இச் சொல்லுடன் ‘உம்’ என்ற கூடுதல், சேர்தல் பொருள்தரும் சொல் சேர்ந்து, யாவர்+உம்-யாவரும் என அனைவரையும் குறிக்கும் சொல் உருவானது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பூங்குன்றனாரின் தொடரில் ‘எல்லா ஊரும் நம் ஊர்; எல்லோரும் நம் கேளிர்’ என்ற கருத்து நிறைந்திருப்பதன் வேர்ப்பொருள் உண்மை வரலாறு இதுவேயாகும்.
எல்ல+உம் – எல்லவும் – எல்லாம்
‘யா’ என்னும் வினாச்சொல், ‘உம்’ என்ற கூடுதல், சேர்தல் பொருள்தரும் சொல்லுடன் சேர்ந்து, ஓர் முழுமைப்பொருள் பெற்றதுபோல், ‘எல்ல’ என்ற ஓர் வினாப்பெயர் ‘உம்’ என்ற கூடுதல், சேர்தல் பொருள்தரும் சொல்லுடன் சேர்ந்து எல்ல+உம் – எல்லவும் – எல்லாம் என்ற முழுமைப்பொருள் தரும் சொல்லாக வளர்ந்தது. இவ்வாறு தமிழின் நீண்ட வரலாற்றில் உருவான ‘எல்லாம்’ என்னும் சொல்லிலிருந்து எட்டி-செட்டி போல் எகர-சகர மாற்றத்தில் மேலை இந்தோ-ஐரோப்பியப் பழைய தேவாலய சுலாவானிக் மொழியில் celu (whole, complete) என்ற சொல் உருவானது. இந்த ‘celu’ ஆகிய சொல், சகர-ககர மாற்றத்தில் heal, health, holy, hole, whole ஆகிய சொற்களைத் தோற்றுவித்தது.
பிந்தித் தோன்றிய whole சொல்
பால்சுகிரேவ்(Palsgrave) என்னும் பாதிரியார்(John Palsgrave (c. 1485 – 1554)), 1530’ஆம் ஆண்டு எழுதிய நூலில், ‘hole’ என்ற சொல்லினைப் பயன்படுத்தியுள்ளார். அதன் பிறகுதான், ‘whole’ என்ற சொல் ஆங்கில மொழியில் வழக்கிற்கு வந்து சேர்ந்தது. வேர்ச்சொல் அறிஞர் கீற்றும் ‘whole’ சொல், கி.பி. 1500’க்குப் பிறகுதான் ஆங்கிலச் சொல்லாக உருவானது என்று எழுதியுள்ளார்.
எல்லாம்-celu-*kailo-whole, heal, health, holy, holiness, holiday
உடல்நலம் குறிக்கும் ‘heal’, health’ ஆகிய சொற்கள் wholeness, a being whole, sound or well என்ற வேர்ப்பொருளில் *kailo என்ற ஓர் முந்து இந்தோ-ஐரோப்பிய வேரிலிருந்து பிறந்தனவாகப் பொக்குரோனி அகராதி, வாட்கின்சு அகராதி, இணையவழி வேர்ச்சொல் அகராதி ஆகியன குறிப்பிடுகின்றன. *kailo என்ற முந்து இந்தோ-ஐரோப்பியக் கற்பித வேர்வடிவம் எங்கும் எப்பொழுதும் எந்த இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலும் வழங்கியது அன்று. இவ் வடிவம், celu என்ற பழைய தேவாலய சுலாவானிக் ஆகிய மேலை இந்தோ-ஐரோப்பிய வடிவிலிருந்தும் அதன்வழிப் பிறந்த heal, health, holy, hole, whole ஆகிய வடிவங்களிலிருந்தும் கற்பிதமாக உருவாக்கிக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். மேலை இந்தோ-ஐரோப்பிய அறிஞர்களும் அகராதிகளும் ‘எல்லாம்’ எனத் தமிழில் வழங்கும் மூலவடிவத்தைக் காணும் வாய்ப்பிருந்திருந்தால், இச் சொற்களின் வரலாறு முழுமையான தெளிவுடையதாக எழுதப்பட்டிருக்கும்.
‘holy’ என்ற சொல் முழுமைப்பொருளிலிருந்து தூய்மைப் பொருளுக்கு உரியதாக மாறுகிறது. மனத் தூய்மையரான சான்றோர், ‘holiness’ எனப்படுவதும் இதனை ஒட்டித்தான். தூய திருநாள்களுக்கு உரிய விடுமுறை நாள்கள் ‘holiday’ எனப்படுவது இவ் வகையிலேயாகும். holy, holiness, holiday ஆகிய சொற்களின் வரலாற்றினை மேற்குறித்த சொற்களோடுதான் வேர்ச்சொல் அறிஞர்கள் உறவுபடுத்தியுள்ள காரணத்தால் இச் சொற்களுக்கும் ‘எல்லாம்’ என்னும் தமிழே மூலமாகும்.
எகரம் – எழுச்சிக் கருத்தும் வினாக்கருத்தும்
ஒரு பொருளை எதுவென்று கேட்கும்பொழுது, அப் பொருளை மேலெடுத்துக் காட்டவேண்டி உள்ளது. இதனால், ‘எ’கரத்தில் தோன்றும் எழுச்சிக்கருத்தும் வினாக்கருத்தும் உறவுடையனவாக அமைகின்றன. (சுட்டுவிளக்கம், ப.58)
எ – வினாப்பொருள்
எ – எது; எ – என்ன; எ – எங்கு; எ – எப்போது; எ – எல்ல (எவை)
வினாச்சொல் + உம் = முழுமைக்கருத்து
‘உம்’ என்னும் ஓர் தமிழ்வேர், கூட்டப்பொருள் குறிப்பது (‘அறமும் பொருளும் இன்பமும் வீடும்’). எழுச்சிக்கருத்தில் தோன்றிய ‘எ’ வழிப் பிறந்த வினாச்சொற்கள், ‘உம்’ என்னும் கூட்டப்பொருள் சொல்லுடன் சேர்ந்து முழுமைப்பொருளைப் பெறுகின்றன.
எது+உம்-எதுவும்; என்ன+உம்-என்னவும்; எங்கு+உம்-எங்கும்; எப்போது+உம்-எப்போதும்
எல்ல+உம் – எல்லவும் – எல்லாம்
எல்ல + உம் – எல்லவும் – எல்லாம் = முழுதும் (‘எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி பல்வழி நுதலிய நிலைத்து ஆகும்மே’, தொல்.சொல்.183; ‘சூடிய எல்லாம் சிறுபசு முகையே’, குறுந்.221:5; ‘செய்ப எல்லாம் செய்தனன்’, புறம். 239:19).