ஒரு பொருளுடன் ஒரு பொருள் மோதும்போது, ஒலி உண்டாகிறது. ‘ஒலி’ என்னும் சொல்லே ‘ஒல்’ என்னும் பொருந்துதல் பொருள் வேரிலிருந்து உருவானது. அவ் வகையில், தமிழில், ‘உறுமு, உரும், உரப்பு, உரறு’ ஆகிய சொற்கள் கூட்டப்பொருள் தரும் ‘உல்’ வேரிலிருந்து பிறந்து ஒலிப்பொருளைப் பெற்றன. கூட்டப்பொருள் ஒலிப்பொருள் தோன்றும் தமிழ் மரபிற்கு ‘நரலுதல், ஒலித்தல், ஓதுதல், ஓதம், கவ்வை, ஓதை, ஓசை’ ஆகிய சொற்களை எடுத்துக்காட்டுகளாக உரைக்கலாம்.
தமிழின் இவ் ‘உரறு’ சொல், மேலை இந்தோ-ஐரோப்பியத்தில் röhren "to roar;" (German), rarian "roar, wail, lament, bellow, cry," (Old English), roren (Middle English), roar (English) என்றெல்லாம் திரிந்து ஒலித்தல் பொருளில் வழங்குகின்றது. கீழை இந்தோ-ஐரோப்பியச் சமற்கிருதத்தில் rai, rāyati என்ற வடிவில் இவ் ‘உரறு’ சொல் திரிந்துள்ளது.
வேர்ச்சொல்: உல் (பொருள்: கூட்டம்)
உல்-உற்-உறு-உறுதல் = பொருந்துதல் (‘மெய்யுறு புணர்ச்சி’, நம்பி.அகத்.36:3); உறு-உறவு = சுற்றம் (‘ஒட்டி உறுவார் உறவு’, மூது.17:4); உறு-உறு+ஆத்+அது-உறாதது = பொருந்தாதது (‘எருதுகால் உறாது’, புறம்.327:1); உறு+உழி-உற்றுழி = பொருந்தும் இடம் (‘உற்றுழி உதவியும்’, புறம்.183:1); உறு-உறார் = பொருந்தாதவர் (‘உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய்’, குறள்.1200); உறு-உறுநர் = சேர்ந்தவர் (‘உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள்’, முருகு.4).