கரிய நிற மாழை, தமிழில் ‘இரும்பொன்’ எனப்பட்டு அதுவே பின்னர் ‘இரும்பு’ எனத் திரிந்தது. ‘இரும்பு’ என்னும் தமிழே ‘iron’ ஆகிய மேலை இந்தோ-ஐரோப்பியச் சொல்லின் மூலம் எனக் கால்டுவெல் எழுதினார். ‘அஞ்சுதல்’ எனப் பொருள்தரும் ‘வெரு’ ஆகிய தமிழ், வெரு – பீரு – பீ - பய எனச் சமற்கிருதத்தில் திரிந்தது போன்றே ‘iron’ சொல்லின் ‘r’, யகரமாகத் திரிந்து சமற்கிருதத்தில் ‘ayas’ என்றானது.
தமிழின் ரகரம், யகரமாகத் திரியும் திரிபிற்கு ஏர் – (ஏய்) - *es-en (harvest, fall) – ern (Old Eng.) – earn (Eng.); எரி – (எய்) - *as (to burn, glow) – asah (Skt.) – arid (Eng.) என வரும் சான்றுகளையும் எடுத்துரைக்கலாம்.
வேர்ச்சொல்: இல் (பொருள்: கருமை)
இல் – இற் – இறடி = கருந்தினை (‘இறடிப் பொம்மல் பெறுகுவிர்’, மலை.169); இல் – இற் – இர் – இரா = இரவு; இல் – இற் – இர் – இரவு; இல் – இற் – இர் – இருள் (‘கார் இருள்’, குறுந்.282:2); இல் – இற் – இர் – இருள் – இருள்+து – இருட்டு (ஒ.நோ.: உருள்+து – உருட்டு; மருள்+து – மருட்டு).
இல் – இற் – இர் – இரும் = கருமையான (‘இரும்பனை’, முருகு.312).
இல் – இற் – இர் – இரும் – இருமை – எருமை = கரிய நிறமான விலங்கு (‘எருமை அன்ன கருங்கல்’, புறம்.5:1; ஒ.நோ. ‘இருள்நிற மையான்’, குறுந்.279:1; செங்கண் கார் ஆன், (சிவந்த கண்களை உடைய கரிய பெண் எருமை), குறுந்.261:3).
இல் – இற் – இர் – இரும் – இரும்பொன் – இரும்பு = கரிய தாது (‘இரும்பு வடித்து அன்ன கருங்கைக் கானவன்’, அகம்.172:6).