‘யான், யாம்’ என்பன தமிழில் வழங்கப்படும் தன்மைப் பெயர்ச்சொற்கள். இப் பெயர்ச்சொற்கள், வேற்றுமை உருபை ஏற்கும்போது முறையே ‘என்’, ‘எம்’ எனத் திரியும் என்பார் தொல்காப்பியர். ‘யான்’, ‘யாம்’ என்னும் சொற்கள் ‘இல்’ என்னும் ஓர் கூட்டக்கருத்து வேரிலிருந்து இல் – இய் – இயை – இயா – யா என்னும் ஓர் அடிச்சொல் தோன்றியது. இவ் ‘யா’ என்னும் அடிச்சொல்லிலிருந்தே ‘யான்’ என்னும் தன்மை ஒருமைச் சொல்லும் ‘யாம்’ என்னும் தன்மைப் பன்மைச் சொல்லும் தோன்றின. தன்னோடு இயைந்தது தான் ஆனது என்னும் பொருளில் இக் கூட்டக்கருத்து அடிச்சொல் உருவானதாக அருளி விளக்கியுள்ளார்.
‘யாம்’ என்னும் சொல்லின் வேற்றுமை ஏற்கும் வடிவமாகிய ‘எம்’ என்னும் சொல், திரவிட மொழியாகிய தெலுங்கில் ēmu, nēmu, mēmu எனத் திரிந்ததை பர்ரோ எமனோ தொகுத்த திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதி காட்டுகிறது. இத் தெலுங்கு வடிவத்தை ஒத்தே கீழை இந்தோ-ஐரோப்பியச் சமற்கிருதத்தில் ‘mam’ என தன்மை ஒருமைச் சொல்லாகச் சென்று சேர்ந்துள்ளது. ‘எம்’ என்னும் சொல், தன்மைப்பன்மை வடிவம் ஆயினும், இச் சொல் ‘உயர்வு ஒருமைச் சொல்லாகவும் தமிழில் தொன்றுதொட்டு ஆளப்பட்டு வந்துள்ளது(எ.கா.: ‘எம் அம்பு கடிவிடுதும்’, புறம். 9:5). தன்மைப் பன்மைச் சொல்லாகிய ‘எம்’ என்பது, இவ்வாறு உயர்வு ஒருமைச் சொல்லாக வருதல் மட்டுமல்லாமல், ‘எம்’ சொல்லிற்கு மூலமான ‘யாம்’ என்பதும் உயர்வு ஒருமைச் சொல்லாக வருவதைத் திருக்குறளில் காண்கிறோம். ‘யாம் மெய்யாக் கண்டவற்றுள் எனைத்தொன்றும் இல்லை வாய்மையின் அல்ல பிற’ (300) என்னும் குறளில் வள்ளுவர் ‘யான் மெய்யாக் கண்டவற்றுள்’ என்பதையே ‘யாம் மெய்யா’ என்று எழுதினார். எனவே, தமிழில் ‘எம்’ என்பது தன்மை ஒருமை வடிவமாக ஆளப்பட்டு வந்துள்ளதை நம்மால் காணமுடிகிறது. ‘எம்’ ஆகிய இத் தன்மைப் பெயர், கிரேக்க மொழியில் eme எனத் திரிந்தது. மேலும், இலத்தீனிலும் பழைய ஐரீசு மொழியிலும் பழைய தேவாலய சுலவானிக் மொழியிலும் ‘me’ எனவும் வெல்சு மொழியில் mi எனவும் அவெஸ்தான் மொழியில் சமற்கிருதத்தில் உள்ளவாறே mam எனவும் திரிந்தது. இறுதியில், தமிழின் ‘எம்’ சொல், மேலை இந்தோ-ஐரோப்பிய ஆங்கிலத்தில் ‘me’ என்னும் செல்வாக்கு வடிவில் சென்று நின்றது.
இல் – கூட்டக்கருத்து வேர்
இல் – இள் – இண் – இணை – இணைதல் = சேர்தல்; இல் – இறு – இறுக்குதல் = நெருக்குதல், சேர்த்தல்; இல் – இய் – இயை – இயைதல் = பொருந்துதல்; இல் – இய் – இயை – இயா – யா – யாத்தல் = கட்டுதல்; இயை - இசை – இசைதல் = ஒத்துக்கொள்ளுதல்.
இல் – இய் – இயை – இயா – யா – யா+அன் - யான் (தன்மை ஒருமைப் பெயர்)
இல் – இய் – இயை – இயா – யா – யா+அன் – யான் = தன்மை ஒருமைப் பெயர் (யா: ‘நான்’ என்றவாறு தன்னையே குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்வதற்கு முதன்முதல் மாந்தன் பயன்படுத்திய மூலவொலியீடு. – ‘யா’, ப.அருளி, ப.273; ‘யான் என் பெயரும்’, தொல்.சொல்.137:2; ‘யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய’, புறம்.173:1; ‘சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’, புறம்.191:7).
யா – யா+அம் – யாம் (தன்மைப்பன்மைப் பெயர்)
யா – யா+அம்–யாம் = தன்மைப்பன்மைப் பெயர் / உயர்வு ஒருமைப் பெயர்
தன்மைப்பன்மைப் பெயர்
‘யான் யாம் நாம் என வரூஉம் பெயரும்’, தொல்.சொல்.பெயர். 8:5; ‘படையமை மறவரும் உடையம் யாம்’, புறம்.72:5; ‘யாம் எந்தையும் இலமே’, புறம்.112:5.
உயர்வு ஒருமைப் பெயர்
‘பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே’, புறம்.205:2; ‘யாம்பாடத் தான் மகிழ்ந்துண்ணும் மன்னே’, புறம். 235:3; ‘பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை’, குறள்.61; ‘யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற’, குறள் 300
யாம் – எம் = வேற்றுமை உருபு ஏற்கும் வடிவம்
யாம் – எம் = வேற்றுமை உருபு ஏற்கும் தன்மைப்பன்மைப் பெயர் வடிவம்.
ஆஎ ஆகும் யாமென் இறுதி
ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும்
(தொல்.எழுத்து.189)
என்னும் நூற்பா, ‘யாம்’ என்னும் தன்மைப்பன்மைப் பெயர், ‘எம்’ எனத் திரியும் எனக் கூறுகிறது. இவ் இடத்து, ‘யா’ என்பதன் ‘ய’கரம் கெட்டு, அதன்பின் நின்ற ஆகாரம் எகரமாகத் திரிந்தது எனவும் மேலைய தொல்காப்பிய நூற்பா கூறுகிறது. (யாம் – ஆம் – எம்).
‘எம் என வரூஉம் கிழமைத் தோற்றம்’, தொல்.பொருள்.பொருளி.27:3; ‘அமிழ்தம் புரையுமால் எமக்கு’, தொல்.பொருள்.கற்.5:13; ‘எம் அம்பு கடி விடுதும்’, புறம்.9:5; ‘எம் இல் பெருமொழி கூறி’, குறுந்.8:3