அல் – அர் (லகர – ரகர மாற்றம், ஒ.நோ.: ஒல் – ஒற் - ஒர் – ஓர்/ஒரு; பொல்-பொற்-பொர்-போர்)
வெப்பக்கருத்தில் வெண்மைக்கருத்தும் செம்மைக்கருத்தும் தோன்றும். (காண்க: ‘அர்’ வேர் விளக்கம்)
அல் - அற் - அர் – அரக்கு = சிவந்த நிறம் கொண்ட ஒரு வகை மரப்பிசின்; அல் - அற் - அர் – அரத்தம் = சிவந்த நிறமுடைய குருதி (ஒ.நோ.: குருதி, குருவும் கெழுவும் நிறனா கும்மே, தொல்.சொல்.301); அல் - அற் – அர் – அரளி = செம்பருத்தி; அல் - அற் - அர் - அரன் – அரன் = சிவந்த பொருள்கள்; சிவந்த நிறமுடைய சிவன்; அல் - அற் – அர் – அருணம் = சிவப்பு, சிந்தூரம், செம்மறியாடு.; அல் - அற் – அர் – அருணன் – அருணமலை-அண்ணாமலை = நெருப்புப் பிழம்பாய் நின்றதாகக் கூறப்பெறும் செம்மலை. (ஒ.நோ.: பெருமான் – பெம்மான்; நெருப்பு – nep (Ko.), nep (To.), nippu (Te.), nipp (Kol.); பருப்பு – pappu (Te., Ka., Kuwi.); அல் - அற் - அர் – அரி = நெல், தினை, சாமை, வரகு, மூங்கில் போன்ற நிலைத்திணைகளில் விளைந்த கூலங்களின் உமி நீங்கிய செந்நிறப் பகுதி (‘கழைவளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து’, மலை.180; ‘நெல்லின் பல அரி’, மலை.413).
குறிப்பு:
‘அரிசி’ என்பதற்குச் சிவந்தது என்பதே முதற்பொருள். ஆயின், வெண்மையானதும் அரிசி எனவே இன்று சொல்லப்படுகிறது. அரிசியின் இயல்பான சிவந்த நிறம், நன்றாகத் தீட்டப்பட்டபின் அதன் செந்நிறம் இழந்து வெண்மை நிறத்தைப் பெற்றுக்கொள்கிறது. அதனால், வெள்ளரிசி, வெண்சோறு போன்ற தொடர்களை எண்ணி அரிசியின் நிறத்தை வெண்மையாகக் கருதுவது பொருந்தாது.