தொல்காப்பியத்தில் சுட்டுப்பெயர் இலக்கணம் குறிப்பிடத்தக்கது. ‘அஇஉ அம்மூன்றும் சுட்டே’(தொல்.எழுத்து.31) என்பது தொல்காப்பியம். இம் மூன்று சுட்டுக்களும் ‘அது, இது, உது’ எனவும் ‘அவை, இவை, உவை’ எனவும் ‘அங்கு, இங்கு, உங்கு’ எனவும் ‘அவ், இவ், உவ்’ என வருவதுடன் இச் சுட்டுக்கள் நீண்டு, ‘ஆங்கு, ஈங்கு, ஊங்கு’ எனவும் ‘ஆண்டை, ஈண்டை, ஊண்டை’ எனவும் வரும். இதனைத் தொல்காப்பியப் பேரிலக்கணமும் அதற்கு உரை வரைந்த உரையாசிரியர்களும் எடுத்துக்காட்டுக்கள்வழி விளக்கியுள்ளனர்.
‘அ,இ,உ’ என்ற மூன்று சுட்டுக்களும் தொடக்கத்தில் சேய்மைச் சுட்டாக ‘ஆ’ என்றும் அண்மைச் சுட்டாக ‘ஈ’ என்றும் முன்மைச் சுட்டாக ‘ஊ’ என்றும் நெடில்வடிவமாகத் தோன்றியிருக்கவேண்டும் என்பார் பாவாணர்(சுட்டுவிளக்கம், ப.8). அன்ன என்னும் சொல் ‘அத்தன்மையானவை’ என்னும் சுட்டுப்பெயராகவும் ‘பிறவும் அன்ன’ என்றவிடத்துக் குறிப்புவினைமுற்றாகவும் ‘பொன் அன்ன மேனி’ என்றவிடத்து உவம உருபாகவும் தமிழில் ஆளப்படுகிறது. ‘இன்ன’ என்னும் சொல், ‘இத்தன்மையன’ என்றவிடத்துச் சுட்டுப்பெயராகவும் ‘இன்ன விறலும் உளகொல்’(புறம்.19:14) என்றவிடத்து உவம உருபாகவும் தமிழில் ஆளப்படுகிறது. ‘அன்ன’, ‘இன்ன’ சொற்கள்போல் உகரத்தின் அடியாகப் பிறந்த ‘உன்ன’ என்னும் சொல், ஆளப்பெற்றதாக நமக்கு ஆட்சி கிடைக்கவில்லை. ஆயினும், திரவிட மொழிகளில் ஒன்றாகிய குருக்(Kurux) மொழியில் ‘உன்ன’ என்னும் சொல்வடிவின் திரிபாகிய ‘hunnū (by that way) என்னும் வடிவம் உள்ளதைத் திரவிட மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதியில் காண்கிறோம்.
தொல்காப்பியர் ‘அன்ன’ என்ற சுட்டுப்பெயருடன் உறவுடையதாகிய ‘ஆன்’ என்றதோர் நெடில் வடிவைக் குறிப்பிடுகின்றார்(தொல்.சொல்.232). ‘அவ்விடம்’ எனப் பொருள்தரும் ‘ஆன்’ என்ற சொல் போல், ‘இவ்விடம்’ என்னும் பொருள்தரும் ‘ஈன்’ என்ற சொல்லும் ஐங்குறுநூற்றில்(ஐங்.401:4) ஆளப்பெற்றுள்ளது. ‘ஆன்’, ‘ஈன்’ போல், ‘உவ்விடம்’ என்ற பொருள்தரும் ‘ஊன்’ என்ற சொல் வழக்கில் இருந்திருக்கவேண்டும். அவ் ‘ஊன்’ சொல்லின் குறில்வடிவமாகிய ‘உன்’ சொல், குருக்(Kurux) மொழியில் hunnū (by that way) என வழங்கும் வழக்கம் கருதி இவ்வாறு எண்ணிப் பார்ப்பதில் பிழையில்லை.
‘ஆன்’ என்ற உயிர் முதற்சொல், மேலை இந்தோ-ஐரோப்பியத்தில் ‘yon’ என உயிர்மெய்ம் முதற்சொல்லாகத் தியூத்தானிய மொழியில் ‘that (over there)’ என்னும் பொருளில் வழங்குவதைப் பாவாணர் எடுத்துக்காட்டியுள்ளார் (தென்சொற் கட்டுரைகள், ப.101). தமிழின் ‘ஆன்’ மேலை இந்தோ-ஐரோப்பியத்தில் ‘yon’ எனத் திரிந்தவாறே, தமிழில் ‘அவ்விடம்’ எனப் பொருள்தரும் ‘ஆண்டு’ என்னும் சொல், மேலை இந்தோ-ஐரோப்பிய ஆங்கிலத்தில் ‘yond’, ‘yonder’(within sight but not near) எனத் திரிந்தது.