எண்ணுப்பெயர்கள்
‘எண்’ என்னும் சொல், தமிழில் பெயராகவும் வினையாகவும் வழங்குகின்றது. ‘ஒன்று, இரண்டு’ என வழங்கும் எண் சொல், பெயர்ச்சொல்லாகும். ‘நல்லன எண்’ என வழங்குமிடத்து ‘எண்’, வினைச்சொல்லாகும். ‘எண்’ என்னும் இவ் இரண்டு சொற்களும் ‘எண் -எண்ணு’ ஆகிய வினைச்சொல், ‘எண்ணம்’ என்ற பெயர்ச்சொல்லையும் அளிக்கும். ‘எ’ என்னும் எழுச்சிப் பொருளிலிருந்து மேன்மேலும் உயர்வதன் காரணமாக எண்ணத்தைக் குறிக்கின்ற ‘எண்’ சொல்லும், ஒன்று, இரண்டு, மூன்று என மேன்மேலும் உயர்வதன் காரணமாக எண்ணினைக் குறிக்கின்ற ‘எண்’ சொல்லும் தமிழில் பிறந்தன.
ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்கள், மிகத் தொடக்க காலத்தில் வளர்ந்தவை. கை விரல்கள் ஐந்து உள்ளதன் அடிப்படையில், ‘கை’ என்னும் சொல்லிலிருந்து ‘ஐ-ஐந்து’ என்னும் சொல் உருவானது என்பர். இரண்டு கைகளிலும் உள்ள விரல்கள் பத்து என்பதன் காரணமாக, ‘பத்து’ என்னும் எண்ணினை எளிதாகத் தொடக்க காலத்தில் மக்கள் உருவாக்கினர். பத்திற்கு மேற்பட்ட எல்லா எண்களும் பத்துடன் ஒவ்வொன்றாகச் சேர்வதன் அடிப்படையில் பத்து+ஒன்று-பதினொன்று; பத்து+இரண்டு-பன்னிரண்டு எனவும் வளர்ந்து பத்து+ஒன்பது-பத்தொன்பது என்னும் எண்ணிற்குப் பிறகு, இரு+பத்து-இருபது என்றே எண்கள் வளர்ந்தன. இருபதிற்கு மேல், முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது என்று வளர்ந்த முறையில் தொண்ணூறு என இன்று குறிக்கும் எண்ணுப்பெயர் தொடக்கத்தில் தொள்+பது-தொண்பது-ஒன்பது என்றே இருந்தது. உடம்பில் ஒன்பது துளைகள் இருப்பது கருதி, துள்-துளை என்னும் சொல்லிலிருந்து துள்-தொள்-தொள்+து-தொண்டு என ஒன்பதினைக் குறிக்கும் சொல் உருவானது எனப் பாவாணர் எழுதியுள்ளார். ‘தொண்டு’ என்னும் சொல் ஒன்பதினைக் குறிக்கும் ஆட்சியினைத் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் காணமுடிகிறது. எனவே, ‘எண்பது’ என்பதற்கு அடுத்த பத்தாவது எண், ‘ஒன்பது’ என்பதேயாகும். ஒன்பது, பத்து முடிந்த பிறகு, நூறு என்ற எண் தொடக்கத்தில் உருவாகவில்லை. ‘பத்துப்பத்து’ என்றே அவ் எண்ணினை அழைத்தனர். நூறுபாடல்கள் கொண்ட எட்டுத்தொகை நூல் ஒன்று, ‘பதிற்றுப்பத்து’ என அழைக்கப்பட்டத்தில் இவ் வரலாறு காணலாம்.