ஒல் – ஒலி
ஒல் – ஒல்லுதல் = பொருந்துதல்; ஒல் – ஒலி = ஓசை (ஒரு பொருள் ஒரு பொருளுடன் பொருந்துவதால் ஏற்படுவது ஒலி, ‘ஒலித்தக்கால் என்னாம் உவரி’, குறள்.763).
ஒல் – ஓல் – ஓலம் (ஒலித்தல்)
ஒல் – ஓல் = ஒலி (‘ஓலுறு பெருக்கின்’, இரகு. நகர. 42); ஒல் – ஓல் – ஓலை = காற்றின் அசைவினால் ஒலி எழுப்புவதே ஓலை எனப்படும். ஓலுதல் சொல்வழி ஒலி எழுப்புதலைக் குறித்த இவ் ஓலைச் சொல் பிறந்தது. ‘ஓலுதல்’ சொல், ‘ஒல்லுதல்’என்னும் பொருந்துதல் பொருள்வழி உருவானது. காய்ந்த தென்னை, பனையாகிய ஓலைகளின்மேல் காற்றுப் பொருந்த அங்கு ஒலி உருவாகிறது. காய்ந்த பனையோலையை அக் காலத்தில் எழுதப் பயன்படுத்தினர். அதனால், பனையோலையில் எழுதப்பட்ட நூல் ஓலை எனப்பட்டதைத் ‘துகடபு காட்சியவையத்தா ரோலை’(கலி.94:42) என்னும் கலித்தொகைப் பாடல்வழி அறிகிறோம். ஒல் – ஓல் – ஓலம் = ஒலித்தல் (சிவனே சிவனே என்று ஓலம் இடினும் உணராய் உணராய் காண்’, திருவெம்.5:7; ‘ஓலம் ஆர் கடல்’, கம்ப.ஆரண்.கவந்தன்.18:1); பெருந்துன்பத்தால் எழும் அழுகை (‘உலகமும் உயிர்களும் ஓலமிட்டன’, கம்ப.யுத்த.பிரட்டி.68:2); ஒலியெழுப்பும் கடல்.
குறிப்பு:
ஓசை, ஓதை, உரறு, நரல் ஆகிய ஒலி குறித்த சொற்கள் கூட்டக்கருத்திலிருந்து பிறந்த வரலாற்றை ‘உரறு’ சொல் வரலாற்றில் காண்க.