‘உல்’ என்னும் கூட்டக்கருத்து வேர், உல்-உற்-உறு; உல்-உற்-உறு-உறு+அ-உற-உறவு எனப் பொருந்துதல் பொருள்தரும் சொல்லையும் உல்-உற்-உறு-உறுதி; உல்-உற்-உர்-உரம் என வலிமைப்பொருள் தரும் சொற்களையும் உல்-உற்-உறு எனப் பொருந்துதல் பொருளிலிருந்து பிறந்த மிகுதிப்பொருள் சொல்லையும் தோற்றுவித்தது. இவ் ‘உல்’ஆகிய வேர், உகை-அகை, முடங்கு-மடங்கு, புல்லி-பல்லி போல் உகர-அகர மாற்றத்தில் ‘அல்’ என்னும் பிறிதொரு வேராக வளர்ந்தது. இவ் ‘அல்’ என்னும் வேரும், அல்-அன்-அன்ன எனப் பொருந்துதல் பொருளில் உவம உருபாகவும் அஃறிணைப் பன்மைக் குறிப்புவினைமுற்றாகவும் அல்-அல்+அது-அல்லது = நெருக்கமானது என இணைப்பிடைச் சொல்லாகவும் (conjunction), அல்-அல்+பு-அன்பு = பிறருடன் கொள்ளும் நெருங்கிய பற்று (ஒ.நோ.: புல்-புற்-புர்-புரி-புரிதல்(புகுமுகம் புரிதல், புகழ்புரிந்த, ப்ரிய, friend, free, freedom, Friday; நல்-நய்-நெய்-நேய்-நேயம்-நேசம்), அல்-அல்+து-அற்று= ஒத்த தன்மையது என அஃறிணை ஒருமைக் குறிப்புவினைமுற்றாகவும் அல்-அள்-அண்-அண்மை; அல்-அள்-அண்-அணி-அணித்து (அணித்தோ சேய்த்தோ) எனவும் அல்-அள்-அண்-அணை என மண் குவிந்த நீரணையைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகவும் அல்-அள்-அண்-அணை எனச் சேர்த்துக் கொள்ளுதலைக் குறிக்கும் வினைச்சொல்லாகவும் அல்-அள்-அள்+து-அண்டு=நெருங்கு; அல்-அள்-அள்+து-அண்டு-அண்டை எனவும் பல கூட்டப்பொருள் சொற்களைத் தோற்றுவித்தது.
மேலும், அல்-அள்-அள்+து-அடு-அடுதல் எனப் பகைவரை நெருங்கித் தாக்கும் போரினைக் குறிக்கும் வினைச்சொல்லையும் காய்கறி, அரிசி முதலியவற்றை அடுதல் செய்து அதாவது உலையில் எண்ணெயில் நெருப்பில் தாக்குதல் செய்து சமைத்தலைக் குறிக்கும் வினைச்சொல்லையும் அல்-அள்-அள்+து-அடு-அடு+இல்-அட்டில்; அல்-அள்-அள்+து-அடு-அடுகளம்-அடுக்களை என உணவு சமைக்கும் இடம் குறிக்கும் பெயர்ச் சொற்களையும் கூட்டப்பொருளில் இவ் ‘அல்’ வேர் ஈன்றது.
‘அல்’ ஆகிய இதே கூட்டப்பொருள் வேர், அல்-அல்+து-அது-அது+இ-அதி எனவும் அல்-அல்+து-அது-அது+இ-அதி-அதிகு-அதிகு+அம்-அதிகம் எனவும் அல்-அள்-அளி எனவும் அல்-அள்-அளி-அழி எனவும் கூட்டப்பொருளிலிருந்து மிகுதிப்பொருள் பிறப்பதன் அடிப்படையில் மிகுதிப்பொருள் சொற்களை உருவாக்கியது.
கூட்டக்கருத்தில் மிகுதிக்கருத்துப் பிறக்கும் என்னும் உண்மையை ‘உல்’ என்னும் வேரில் ‘உறு’ என்னும் மிகுதிப்பொருள் சொல் பிறந்ததை மேல் எடுத்துக்காட்டினோம். அவ்வாறே, ‘அல்’ ஆகிய கூட்டக்கருத்துவேரிலிருந்து அதி, அதிகம், அளி, அழி ஆகிய மிகுதிப்பொருள் தரும் சொற்கள் பிறந்ததும் இங்கு விளக்கப்பட்டது. இன்னும், கூட்டக்கருத்திலிருந்து மிகுதிப்பொருள் கருத்துப் பிறக்கும் என்பதனை ‘மல்’ என்னும் கூட்டக்கருத்து வேரிலிருந்து முல்-மல்-மலி என்னும் மிகுதிப்பொருள் தரும் சொல் பிறந்ததையும் ‘நல்’ என்னும் கூட்டக்கருத்து வேரிலிருந்து நல்-நன்-நனி என மிகுதிப்பொருள் தரும் சொல் பிறந்ததையும் ‘குல்’ என்னும் கூட்டக்கருத்து வேரிலிருந்து குல்-குற்-குர்-கூர் என்னும் மிகுதிப்பொருள் தரும் சொல் பிறந்ததையும் ‘கல்’ என்னும் கூட்டக்கருத்து வேரிலிருந்து கல்-கள்-களி-கழி என்னும் மிகுதிப்பொருள் தரும் சொல் பிறந்ததையும் ஒப்புநோக்கிற்கு எடுத்துரைக்கலாம்.
‘அல்’ என்னும் கூட்டக்கருத்து வேர், தமிழில் பல மிகுதிப் பொருள் சொற்களைத் தோற்றுவித்தவாறே, பன்னெடும் காலத்திற்கு முன், மேலை இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் புகுந்து பெருகுதலையும்(grow) வளர்த்தலையும்(nourish) குறிக்கும் பல சொற்களைத் தோற்றுவித்துள்ளது.
கூட்டப்பொருள் வேராகிய ‘அல்’ என்பதிலிருந்து பிறந்த வளர்தல், பெருகுதல் பொருள் தரும் ‘அல்’ சொல், மேலை இந்தோ-ஐரோப்பிய இலத்தீனில் altus (high, literally grown tall), alere (to feed, nourish, suckle; bring up, increase), almus (nurturing, nourishing), alumnus (fosterling, step-child) எனவும் கிரேக்கத்தில் aldaino (make grow, strengthen), althein, althainein (to get well) எனவும் கோதிக் மொழியில் alan (to grow up) எனவும் Old Norse மொழியில் ala (to nourish) எனவும் பழைய ஐரீசு மொழியில் alim (I nourish) எனவும் பெருகுதல், வளர்த்தல் பொருளில் பல சொற்களாக வளர்ந்துள்ளது.
தமிழில் தோற்றத்தால் பெரியவரையும் அகவையால் பெரியவரையும் ‘வளர்ந்தவர்’, ‘உயர்ந்தவர்’, ‘முதியோர்’, ‘மூத்தோர்’ எனக் கூறும் வழக்கு உள்ளது. அவ் வகையில் வளர்தல் பொருள்தரும் ‘அல்’ ஆகிய வேர், கோதிக் மொழியில் alþeis எனவும் டச்சு மொழியில் oud எனவும் செருமன் மொழியில் alt எனவும் ஆங்கிலத்தில் old, elder எனவும் அகவை மிக்கோரைக் குறிக்கும் சொற்களையும் ஈன்றது.